மும்பை: உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட பிட்ச் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்ற பின் பாகிஸ்தான் ஊடகங்களும், வீரர்களும் இந்திய அணி பவுலர்களுக்கு வேறு பந்துகள் வழங்கப்படுகிறது, இந்திய அணியால் மட்டும் எப்படி அனைத்து போட்டிகளிலும் டாஸ் வெல்ல முடிகிறது என்று புதிய புதிய சர்ச்சைகளை கிளப்பி வந்தன. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் குபீர் சிரிப்பை வரவழைத்தது.

அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. நேற்று பிட்சை பார்வையிட்ட ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் பிட்சில் இருந்த புற்களை வெட்ட அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் போட்டிக்கு முந்தைய நாளில் புற்களை வெட்டுவது வழக்கமான நடவடிக்கை தான்.
அதேபோல் வான்கடே மைதானத்தில் ஐசிசி மேற்பார்வையாளர் அட்கின்சன் 7வது பிட்சை தயார் செய்யுமாறு கூறியதாகவும், ஆனால் அந்த பிட்சில் பிரச்சனை இருப்பதால் மாறாக பிசிசிஐ தரப்பில் 6வது பிட்ச் தயார் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 7வது பிட்சில் இதுவரை எந்த ஆட்டமும் நடக்கவில்லை. ஆனால் 6வது பிட்சில் இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடத்தப்பட்டது.

இதனை நியூசிலாந்து ஊடகங்கள் சர்ச்சையாக கூறி வருகின்றன. ஆனால் ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டம் புதிய பிட்சில் தான் நடத்தப்பட வேண்டும் என்ற எந்த விதிமுறைகளும் இல்லை. சிறந்த பிட்ச் மற்றும் சிறந்த அவுட்ஃபீல்டை கணக்கிட்டு முடிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஐசிசியின் விதியாகும்.
இதனால் பிட்ச் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அது ஐசிசி விதிகளின் படியே நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த பிட்ச்சாக இருந்தாலும் இரு அணிகளும் வெவ்வேறு பிட்சில் விளையாடப் போவதில்லை. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஒரே பிட்சில் தான் பேட்டிங் மற்றும் பவுலிங்கை மேற்கொள்ளவுள்ளன. இதனால் இந்திய அணியின் வெற்றியை பொறுக்க முடியாமல் வெளிநாட்டு ஊடகங்கள் வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.