தரம்சாலா: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்தது சர்ச்சையான நிலையில், அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆதரவளித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். விராட் கோலியின் சதம் காரணமாக இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. ஆனால் விராட் கோலி சதம் அடிப்பதற்காக கேஎல் ராகுல் ரன்கள் எடுக்காமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் இந்திய அணியின் ரன் ரேட்டை விடவும், இந்திய வீரர்களுக்கு சொந்த சாதனைகள் முக்கியமா என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக ரசிகரக்ள் விராட் கோலியை சுயநலவாதி என்று காட்டமாக விமர்சிக்க தொடங்கினர். ஆனால் விராட் கோலியை சதம் அடிக்க முயற்சி செய்ய கேஎல் ராகுல் வலியுறுத்தியது பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் விராட் கோலி மீதான விமர்சனங்கள் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் வாசிம் அக்ரம் பேசுகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதமடிக்க முக்கியத்துவம் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. முதல் வங்கதேச பேட்டிங்கின் போது 50 ஓவர்களும் களத்தில் இருந்தார்.
அதன்பின் இந்திய அணிக்காக 30 ஓவர்கள் வரை பேட்டிங் செய்துள்ளார். இந்திய அணி 40வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த போதும், விராட் கோலி அடுத்தடுத்து 2 ரன்களை விரைவாக ஓடி எடுத்தார். இதன் காரணமாக தான் விராட் கோலி மனுஷனா என்ற கேள்வியே எழுகிறது. இப்படியொரு ஃபிட்னஸை மனிதனால் எப்படி எட்ட முடிந்தது.

அந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது. என்னை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சதமடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதற்கு முயற்சி செய்வதில் எந்த தவறும் இல்லை. இந்திய அணி வீரர்கள் இருவரும் களத்தில் ஃபீல்டர்களை ஓட விட்டுக் கொண்டிருந்தனர். பேட்டிங்கை ரசித்து ஆடிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 8 ஆண்டுகாளுக்கு பின் சதம் விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றது குறிப்பிடத்தக்கது.