அப்படிப்போடு.. ஐபிஎல் 'மாஸ்' அப்டேட் - ரசிகர்கள் 'செம' ஹேப்பி
மும்பை: ஐபிஎல் 2021 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடரை பாதியில் நிறுத்தியது பிசிசிஐ. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் அட்டகாசமாக விளையாடிக் கொண்டிருந்த போது, ஐபிஎல் நிறுத்தப்பட்டது யெல்லோ ஆர்மி ரசிகர்களை வருத்தம் அடையச் செய்தது.
அதேசமயம், இந்தாண்டு இறுதியில், அதாவது டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

ஆசைக்கு ஆப்பு
நாட்டில் இன்னமும் வைரஸின் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் இருப்பதால், இப்போதைக்கு இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பில்லை. இலங்கை கூட, 'நாங்கள் ஐபிஎல் நடத்தித் தருகிறோம்' என்று ஆஃபர் கொடுத்தது. ஆனால், அந்த நாட்டிலேயே தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், பிறகு சைலண்ட் ஆகிவிட்டது. வேறு சில நாடுகளில் போட்டிகளை நடத்தலாமா என்று பிசிசிஐ தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

மனோஜ் பத்லே
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸ் அழைப்பில் பேசிய அந்த அணி உரிமையாளர் மனோஜ் பத்லே, "மீண்டும் போட்டியை நடத்துவதற்கான இடம் மற்றும் தேதிகளை நிர்ணயிப்பது தான் கடும் சவாலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வீரர்கள் ஏற்கனவே நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் கூட
காலண்டர்கள் நம்பமுடியாத அளவிற்கு நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு COVID க்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள வாரியங்கள் முடிந்தவரை பல கிரிக்கெட் போட்டிகளையும் பல டெஸ்ட் போட்டிகளையும் நடத்த முயற்சிக்கின்றன. இது ஒரு உண்மையான சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயம் மீண்டும் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் அல்லது ஏதேனும் ஒரு மத்திய கிழக்கு நாடுகளில் நடத்த வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

புது டிராக்
ராயல்ஸ் உரிமையாளரின் இந்த அறிவிப்பு, சோர்ந்திருந்த ஐபிஎல் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்படலாம் என்று கூறிவந்த நிலையில், உரிமையாளர் மனோஜ் பத்லே இங்கிலாந்தில் கூட நடத்த வாய்ப்புள்ளது என்று கூறி புது டிராக் போட்டிருக்கிறார். எது எப்படியோ, மறுபடியும் சீரிஸ் தொடங்கினால் சரி!.


Click it and Unblock the Notifications