
நியூசிலாந்து தொடர் தோல்விகள்
நியூசிலாந்து டி20 தொடரை இந்தியா 5 - 0 என வென்றது. ஆனாலும், ஒருநாள் தொடரை 0 - 3 என்ற அளவிலும், டெஸ்ட் தொடரை 0 - 2 எனவும் இழந்து படுதோல்வி அடைந்தது இந்திய அணி. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் படுமோசமாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன் கோலி தான்.

கேப்டன் மாற்றம்
அந்த தொடரின் முடிவில் கேப்டன் விராட் கோலியின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து பேசப்பட்டது. எனினும், பிசிசிஐ வட்டாரத்தில் அப்படி ஒரு விவாதம் இன்னும் துவங்கவில்லை.

இளம் வீரர்
ரசிகர்கள் மத்தியில் தான் இந்த விவாதம் சூடு பிடித்து வருகிறது. சிலர் துணை கேப்டன் ரோஹித் சர்மா தான் கோலிக்கு அடுத்து இந்திய அணியை வழி நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால், சிலர் அணிக்கு இளம் கேப்டன் தான் தேவை என ஒரு இளம் வீரரை கை காட்டுகின்றனர்.

அனுபவம் இல்லாத இவரா?
அந்த இளம் வீரர் வேறு யாருமல்ல ஸ்ரேயாஸ் ஐயர் தான். இன்னும் 20 ஒருநாள் போட்டிகள் கூட ஆடி இராத அவரா அடுத்த இந்திய அணி கேப்டன்? என்ற கேள்வி எழுந்தாலும், அவரது உள்ளூர் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் கேப்டன்சி அனுபவம் அவருக்கு சாதகமாக உள்ளது.

முன் உதாரணம்
ரோஹித் சர்மா இருக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயராய் எப்படி கேப்டனாக நியமிக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், சேவாக், யுவராஜ் சிங் அணியில் இருந்த போது தான் அவர்களை விட மிகக் குறைந்த அனுபவம் கொண்ட தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

நீண்ட கால கேப்டன்
மேலும், ரோஹித் சர்மாவுக்கு தற்போது 32 வயது ஆகிறது. இன்னும் நீண்ட காலம் அவரால் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. அந்த நிலையில், அவரால் நீண்ட காலம் கேப்டனாக உத்வேகத்துடன், துடிப்புடன் செயல்பட முடியாது.

ஐபிஎல் கேப்டன்சி
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தியா ஏ மற்றும் ஐபிஎல் தொடர் கேப்டன்சி ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை பிளே - ஆஃப் வரை அழைத்துச் சென்றார் ஸ்ரேயாஸ் ஐயர்.

5, 6 ஆண்டுகள்
ரோஹித் சர்மா கேப்டனாக வந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்பான கேப்டனாக இருப்பார். 25 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டால், அவர் அடுத்த 5 - 6 ஆண்டுகளுக்கு அணியை வழிநடத்தும் ஆற்றலை பெற்று இருப்பார்.

சிறந்த பேட்ஸ்மேன்
முந்தைய கேப்டன் தோனி மற்றும் தற்போதைய கேப்டன் விராட் கோலி இருவரும், சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவே இருக்கிறார். சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் தன் முதல் சதத்தை பதிவு செய்தார்.

கற்றுக் கொள்ள வேண்டும்
தோனியிடம் எப்படி விராட் கோலி கேப்டன்சி குறித்து கற்றுக் கொண்டு கேப்டன் பதவியை ஏற்றாரோ, அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த ஓராண்டு கோலியிடம் கேப்டன்சி குறித்த அனுபவங்களை கற்றுக் கொண்டு இந்திய அணிக்கு கேப்டனாக வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications