மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ரோஹித் சர்மா களத்தில் எடுத்த ஒரு அதிரடி முடிவுதான் காரணம் என முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறி இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஆடியது.
அப்போது 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. அப்போது பும்ராவுக்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்தன. முக்கிய பந்துவீச்சாளரான பும்ராவை கடைசி ஓவரில் தான் கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை பும்ராவுக்கு அளித்து அவரது ஓவர்களை முடித்தார் ரோஹித் சர்மா.

பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தம் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதனால், தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் ஏற்பட்டு கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. கடைசி ஓவரில் தடுமாறி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதை குறிப்பிட்ட விக்ரம் ரத்தோர், ரோஹித் சர்மாவின் திட்டங்கள் குறித்து பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், "திட்டமிடுவதில் ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டன். 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பும்ராவின் ஓவர்களை முன்பே அவர் முடித்தார். பலரும் அந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பி இருப்பார்கள். ஆனால், அந்த முடிவால் தான் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவரது திட்டம் களத்தில் துல்லியமாக வேலை செய்தது. வெளியில் அமர்ந்து ஒரு பயிற்சியாளராக அவரை பார்க்கும் போதும் நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. சில சமயம் அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என நமக்கு தோன்றும். ஆனால், சில நிமிடங்களுக்கு பின்பு நமக்கு அது புரியும்." என்றார் விக்ரம் ரத்தோர்.
மேலும், ரோஹித் சர்மா வீரர்களுடன் அதிக நேரம் செலவிடுவார் என்பதை மீண்டும் குறிப்பிட்டார். "ரோஹித் சர்மா வீரர்களின் கேப்டன். அவர் வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார். வேறு எந்த கேப்டனும் அணி சந்திப்புகளுக்காகவும், திட்டமிடுதலுக்காகவும் இத்தனை நேரத்தை செலவிடுவார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் திட்டமிடுதலுக்காக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார். பவுலர் மீட்டிங், பேட்ஸ்மேன் மீட்டிங் என அனைத்திலும் பங்கேற்பார். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயல்வார். வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார்." என்றார் விக்ரம் ரத்தோர்.