
என்ன தொடர்?
அது 1998ஆம் ஆண்டு. ஸ்டீவ் வாஹ் தலைமயிலான ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் உலகை மிரட்டி வந்தது. அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோகோ - கோலா கோப்பை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்திய அணியின் நிலை
லீக் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து தலா ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருந்தன. ஆஸ்திரேலியா தான் ஆடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று, லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்தியாவை சந்தித்தது. இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அல்லது புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணியை விட கூடுதல் ரன் ரேட் பெற வேண்டும்.

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
போட்டி நடந்த இடம் ஷார்ஜா. ஏப்ரல் மாதத்தில் ஷார்ஜா வெப்பமயமாக இருக்கும். மேலும், அந்த ஆடுகளம் சற்றே மந்தமானது. இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. மார்க் வாஹ் 81, மைக்கேல் பெவன் 101 ரன்கள் குவித்தனர். அந்த அணி 50 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தது.

கடினமான சேஸிங்
அன்றைய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியால் அந்த இலக்கை சேஸிங் செய்ய முடியாது என்றே கருதப்பட்டது. இந்திய அணி அதிகபட்சம் நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை தாண்டினாலே பெரிது என கருதப்பட்டது.

இந்திய பேட்டிங் சரிவு
இந்திய அணியில் கங்குலி 17, நயன் மோங்கியா 35, அசாருதீன் 14, ஜடேஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனால், துவக்க வீரராக களமிறங்கிய சச்சின் தனி ஆளாக போராடினார். சிறந்த பந்துவீச்சாளர்களான வார்னே, டேமியன் பிளெம்மிங், காஸ்பரோவிக்ஸ், டாம் மூடி, ஸ்டீவ் வாஹ் என அனைவரையும் எளிதாக ஆடினார்.

புயலுக்கு நடுவே சச்சின்
போட்டியின் இடையே பாலைவனத்தில் ஏற்படும் மணல் புயல் குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 276 ரன்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரிடமும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. சச்சின் மட்டுமே அந்த புயலுக்கு நடுவே, கடும் வெப்பத்துக்கு நடுவே தனி ஆவர்த்தனம் செய்து வந்தார். சதம் கடந்தார்.

வெற்றிக்காக ஆடிய சச்சின்
42.4வது ஓவரில் இந்தியா 237 ரன்களை கடந்தது. அத்துடன் நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை இந்தியா தாண்டியது. சச்சின் அதற்காகவே மிக அதிரடியாக ஆடி வந்ததாக கருதிய அனைவரும், அடுத்த பந்தில் மிரண்டனர். சச்சின் அடுத்த பந்தில் ஃபோர் அடித்தார். அவர் முகத்தில் நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை கடந்து விட்டோம் என்ற திருப்தி தெரியவில்லை.

அவுட் ஆனது எப்படி?
சச்சின் வெற்றிக்காக ஆடுகிறார் என்பது அந்த சமயத்தில் விமர்சகர்களால் நம்ப முடியாததாக இருந்தது. எனினும், அடுத்த பந்தில் அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தார் சச்சின். இதில் மற்றொரு விஷயம், பேட்டில் பந்து பட்டு எட்ஜ் ஆனது. அம்பயர் அவுட் தரவில்லை. ஆனால், தன் பேட்டில் பந்து பட்டதை உணர்ந்து இருந்த சச்சின் தானாகவே களத்தை விட்டு வெளியேறினார்.

பரபரப்பு
சச்சின் சென்ற பின் அடுத்த மூன்று ஓவர்களில் இந்திய அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுதான் அப்போது இருந்த மனோபாவம். சச்சின் 131 போட்டிகளில் 143 ரன்கள் எடுத்து இருந்தார். 5 சிக்ஸர்களும் அடக்கம். சச்சினின் அந்த சதம், அந்த இன்னிங்க்ஸ் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.

மறக்க முடியாத சதம்
"சச்சின் ஆடினால் கிரிக்கெட் பார்ப்போம், இல்லாவிட்டால் டிவியை அணைத்துவிடுவோம்" என ஒரு தலைமுறை இந்திய ரசிகர்கள் அன்றுதான் முடிவு எடுத்தனர். அதே தொடரின் இறுதிப் போட்டியில் சச்சின் 134 ரன்கள் குவித்து, 273 ரன்களை சேஸிங் செய்ய காரணமாக இருந்தார். ஆனால், அந்த இறுதிப் போட்டி வெற்றியில் அடித்த சதத்தை, விட லீக் போட்டியில் அடித்த சதம் தான் இன்றும் ரசிகர்கள் மனதில் நீடித்து உள்ளது.


Click it and Unblock the Notifications











