பிசிசிஐ ஆலோசனை
அதேசமயம், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா தாக்கம் குறைவாக உள்ள நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களிடம் பேசி வருகிறது. இதில், மூன்று நாடுகள் ஆப்ஷனில் உள்ளன. அவை இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம். இதில், இலங்கை மட்டும் தாங்களாகவே முன் வந்து, ஐபிஎல் தொடரை நடத்தித் தருவதாக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த நாட்டில் எதிர்பாராதவிதமாக இப்போது தினசரி பாதிப்பு 2000க்கும் அதிகமாக எகிறி வருகிறது. நேற்று (மே.14) மட்டும் இலங்கையில் புதிதாக 2,289 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, நேற்று மட்டும் 31 பேர் இறந்திருக்கின்றனர்.
எகிறும் வைரஸ்
அதேபோல், இங்கிலாந்திலும் ஐபிஎல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும், ஐபிஎல் நடத்த இங்கிலாந்து மிகச் சிறந்த ஆப்ஷன் என்று கூறியிருந்தார். ஆனால், அங்கும் கொரோனா பாதிப்பு சற்று வீரியமாகவே உள்ளது. நேற்று மட்டும் அங்கு 2,193 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இது மே மாதம் என்பதால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஏனெனில், ஐபிஎல் மீண்டும் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தான் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அதற்குள் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தாக்கம் மேலும் குறையலாம் என்கின்றனர்.
எண்ணிக்கை குறைவு
எனினும், இலங்கை மற்றும் இங்கிலாந்தை ஒப்பிடுகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது. அங்கு புதிதாக 1,452 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனால், 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஸோ, இப்போதைய சூழல் படி இலங்கை, இங்கிலாந்தை காட்டிலும் யுஏஇ பெஸ்ட் என்பதே பிசிசிஐ-யின் கருத்தாக உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏனெனில், அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் தொடங்குகிறது. ஆனால், நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலையை பார்த்தால், அக்., மாதம் உலகக் கோப்பையை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஸோ, டி20 உலகக் கோப்பைத் தொடரையும் அமீரகத்துக்கு ஷிஃப்ட் செய்துவிட்டு, அப்படியே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளையும் நடத்திவிடலாம் என்று சில நிர்வாகிகள் யோசனை தெரிவித்துள்ளனர். எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியது தான்.