16வது ஐபிஎல் தொடரின் 41வது போட்டியில் சென்னை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கான்வே 52 பந்துகளில் 92 ரன்கள் குவித்து இறுதுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி கடைசி 2 பந்தில் 2 சிக்சர் விளாசியது, சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதையடுத்து 201 ரன்கள் தான் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிராப்சிம்ரன் மற்றும் ஷிகர் தவான் திரடியாக விளையாடி 4.2 ஓவரில் எல்லாம் பஞ்சாப் அணி 50 ரன்களை தொட்டது. ஷிகர் தவான் 15 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பிராப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீசசில் தோனியின் அபார ஸ்டம்பிட்டால் பெவிலியன் திரும்பினார். இதே போன்று அதர்வா 13 ரன்கள் எடுக்க, லிவிங்ஸ்டோன் 4 சிக்சர்களை விளாசி 40 ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் அணி வெற்றியின் அருகே வந்தது. இந்த நிலையில் ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.
இதனால் பஞ்சாப் அணி வெற்றியின் அருகே வந்தது எனினும் 19வது ஓவரின் 4வது பந்தில் சிஎஸ்கே வீரர் ஷாயிக் ரஷித் பிடித்த கேட்ச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட, சிஎஸ்கே வீரர் பதிரானா யாக்கர்களை வீசி தெறிக்கவிட்டார். இந்த நிலையில், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் வீரர்கள் ஓடியே மூன்று ரன்களை எடுத்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.