பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி இடையிலான போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் ஏப்ரல் 17ஆம் தேதி நடக்கவுள்ள போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கடைசி பந்து வரை ஆட்டம் நகர்வால் ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 4 ஆண்டுகளுக்கு பின் பல்வேறு மாநிலங்களிலும் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், ரசிகர்கள் மைதானத்திற்கு அதிகளவில் வந்து நேரில் போட்டிகளை பார்த்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில் அரிதாக உள்ளது.

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் தேர்தல் வருவதால், ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலேயே ஆர்சிபி அணி சின்னசாமி மைதானத்தில் 7 போட்டிகளை விளையாட உள்ளது. ஏற்கனவே இரு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தப் போட்டியில் டெல்லி அணியை ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை அணியை சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. ஏற்கனவே சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி "சவுத் இந்தியன் டெர்பி" என்று அழைக்கப்பட்டு வருகிறது. இரு அணிகளும் அவ்வளவு தீவிரமாக கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதால், இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அதேபோல் தோனி - விராட் கோலி இருவரும் நீண்ட நாட்களுக்கு பின் களத்தில் நேரில் மோதிக் கொள்ள உள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த முறை தோனி பெங்களூரு மைதானத்தில் விளையாடிய போது, ஒரு ரன் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றிபெற்றது. இருப்பினும் பெங்களூரு ரசிகர்கள் மரண பயத்தை உணர்ந்தனர். தற்போதும் தோனி அதே ஃபார்மில் இருப்பதால், சிஎஸ்கே- ஆர்சிபி இடையிலான போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதேபோல் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்தது போல், பெங்களூருவிலும் ஆதிக்கம் செலுத்த சென்னை ரசிகர்கள் பலரும் கர்நாடகாவுக்கு படையெடுத்துள்ளனர்.