மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் புயல் மற்றும் ஆசியக் கோப்பையின் நாயகனான திலக் வர்மா, 2022-ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட உயிருக்கே ஆபத்தான தசை சிதைவு நோய் (Rhabdomyolysis) குறித்த தகவல்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். சரியான நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் பிசிசிஐ தலையிட்டு உதவியதால், தான் தப்பியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட "ராப்டோமயோலிசிஸ்" (Rhabdomyolysis) என்ற அரிய வகை நோய் பாதிப்பு குறித்துதான் அவர் குறிப்பிட்டார். இந்த நோயில், தசைகள் அதிவேகமாகச் சிதைந்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

"இந்த விஷயத்தை நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. எனது முதல் ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, எனக்குச் சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. நான் உலகின் சிறந்த ஃபிட்னஸ் கொண்ட வீரராக மாற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்கத் தவறிவிட்டேன். ஓய்வு நாட்களில்கூட ஜிம்மில் கடுமையாகப் பயிற்சி செய்தேன். இதனால், எனது தசைகள் அளவுக்கு அதிகமாக அழுத்தத்திற்கு உள்ளாகி, சிதையத் தொடங்கின" என்றார்.
இந்த நோயின் உச்சகட்ட பயங்கரம் வங்கதேசத்தில் நடந்த ஒரு 'ஏ' சீரிஸ் போட்டியின்போது வெளிப்பட்டுள்ளது. "அந்தப் போட்டியில் சதமடிக்க வேண்டும் என்று நான் என்னையே வருத்திக்கொண்டு ஆடினேன். அப்போது திடீரென என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. என் விரல்களை அசைக்கவே முடியவில்லை. என் உடல் முழுவதும் கல்லைப் போல இறுகிவிட்டது. வலியால் துடித்த என்னை, 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேற்றினர். என் விரல்கள் அசைக்க முடியாததால், கிளவுஸை கத்தரிக்கோலால் வெட்டித்தான் எடுக்க வேண்டியிருந்தது" என்று அந்தப் பயங்கரமான தருணத்தை அவர் விவரித்தார்.
மைதானத்திலிருந்து நேராக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திலக் வர்மாவுக்கு, உடனடியாக உதவிக்கரம் நீண்டுள்ளது. "உடனடியாக மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி சாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் பிசிசிஐ-யிடம் பேசி எனக்கு உதவினார். அதற்காக ஜெய் ஷா சாருக்கு என் நன்றிகள். நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் என்னிடம், 'இன்னும் சில மணிநேரங்கள் தாமதித்திருந்தால், விளைவுகள் மோசமாக இருந்திருக்கும்' என்றனர். என் நரம்புகள் இறுகிப் போனதால், ஐவி ஊசியைக்கூட என் உடம்பில் செலுத்த முடியவில்லை. ஊசி உடைந்தது. என் அம்மா என்னுடன் இருந்தார்" என்று குறிப்பிட்டார் திலக் வர்மா.
பல மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்து, தீவிர சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்த திலக் வர்மா, 2023 ஐபிஎல் சீசனில் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்தார். தனது கம்பேக் போட்டியிலேயே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 46 பந்துகளில் 84* ரன்கள் விளாசி, தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு, இந்திய அணியில் இடம்பிடித்து, கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகச் சீரான ஆட்டம் ஆடி, நாடு முழுவதும் ஹீரோவாக மாறினார். உயிருக்கே ஆபத்தான நோயிலிருந்து மீண்டு, இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார் திலக் வர்மா.