டிஎன்பிஎல் கிரிக்கெட்: காஞ்சி வாரியர்ஸை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் காஞ்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் பாணியில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் சென்னை, திண்டுக்கல், நெல்லை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 7 வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 159 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஜோடியான ஜெகதீசன்-கங்கா ஸ்ரீதர் ராஜூ முதல் விக்கெட்டுக்கு 63 ரன்களை குவித்தது. ஸ்ரீதர் ராஜூ 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஜெகதீசன் 40 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 3-வது வீரராக களம் இறங்கிய சுப்ரமணிய சிவா 15 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த கேப்டன் அஸ்வின் 15 பந்தில் 15 ரன்களும், விவேக் 18 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க வீரர்கள் பரத் சங்கர் 8 ரன்னிலும், நிலேஷ் சுப்பிரமணியன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் மற்ற விக்கெட்டுகளும் சரிந்தன. கேப்டன் இந்திரஜித் 3 ரன்களில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். அதிகபட்சமாக பார்த்திபன் 20 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர் முடிவில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களே எடுத்தது. இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications