தமிழ்நாட்டு மானமே போச்சு.. களத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட தமிழக வீரர்.. தடை விதிக்க வாய்ப்பு
நெல்லை: டிஎன்பிஎல் 6வது சீசனில் தொடக்க ஆட்டத்திலேயே ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் அணியுடன் நெல்லை அணி மோதியது.
டாஸை வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
நெல்லை அணியில் களமிறங்கிய ஐபிஎல் புகழ் சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

சூப்பர் ஓவர்
கடினமான இலக்கை எதிர்கொண்ட சேப்பாக் அணி முதலில் தடுமாறினாலும், கேப்டன் கௌசிக் காந்தி, சோனு யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடிய போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறையில் முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 9 ரன்கள் மட்டுமே எடுக்க, நெல்லை அணி வெற்றி பெற்றது.

அப்ரஜித் சம்பவம்
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில், சேப்பாக் அணியின் தொடக்க வீரர்கள் கௌசிக் காந்தி மற்றும் நாரயணன் ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அப்போது 4வது ஓவரை வீசிய பாபா அப்ரஜித் அஸ்வின் ஸ்டைலில் ஒரு சம்பவத்தை செய்தார். பாபா அப்ரஜித் ஓவர் வீசும் போது, பந்துவீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்த நாரயணன் ஜெகதீசன் எல்லைக் கோட்டை விட்டு நகர்ந்தார்.

அநாகரீக செயல்
அப்போது அவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துவிட்டு, மீண்டும் பந்துவீச சென்றார். மீண்டும் நாராயணன் ஜெகதீசன் அதே தவறை செய்ய, இம்முறை எவ்வித எச்சரிக்கையும் இன்றி அப்ரஜித், டக்குன்று மான்காட் முறையில் ரன் அவுட் செய்தார். இதனை மறு ஆய்வு செய்த மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க, ஜெகதீசன் கடுப்பாகி பெவிலியன் நோக்கி சென்றார். அப்போது தனது நடுவிரலை தொடர்ந்து 2 முறை உயர்த்தி அநாகரிகமான முறையில் ஜெகதீசன் நடந்து கொண்டார்.

ஜெகதீசனுக்கு தடை?
இந்த வகை அவுட்க்கு விதியில் இடமிருப்பதாக ஐசிசியே அண்மையில் அறிவித்துள்ள நிலையில், அப்ரஜித் செய்தது தவறு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு எல்லை மீறி ஜெகதீசன் நாராயணன் நடந்து கொண்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். களத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஜெகதீசனுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications