ஆர்சிபி வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிக்காக இறுதிவரை போராடியும் அதை பெற முடியாமல் நூலிழையில் தவறவிட்டுள்ளது. போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி கோச் ரிக்கி பாண்டிங் பயண கட்டுப்பாடுகள் குறித்து கவலையில்லை என்று கூறியுள்ளார்.
தடை விதித்த ஆஸ்திரேலியா
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதனிடையே, இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக வரும் மே மாதம் 15ம் தேதிவரை நேரடி விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.
வீரர்கள் கவலை கொள்ளவில்லை
இந்நிலையில் தங்களது அணியில் உள்ள வீரர்கள் யாரும் பயண கட்டுப்பாடுகள் குறித்து கவலை கொள்ள வில்லை என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். தங்களது அணி வீரர் அஸ்வின் மட்டுமே கொரோனா காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், இதுகுறித்து அணி வீரர்கள் அதிகமாக கலந்தாலோசித்ததாக தெரிவித்துள்ளார்.
இதயம் துடிக்கிறது
மேலும் தாங்கள் பாதுகாப்பாக பயோ பபுளில் உள்ள நிலையில், வெளியில் மக்கள் கொரோனா பாதிக்கும் சூழல் குறித்து தாங்கள் அதிகமாக உணர்ந்துள்ளதாகவும் வெளியில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மக்களுக்காகவும் தங்களது இதயம் துடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயணத்தடை பெரிதில்லை
அவர்களுடைய பாதிப்புகளை பார்க்கும்போது தங்களின் பயண தடைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியை அதிகமான மக்கள் இந்த நேரத்தில் ரசித்து பார்ப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தளள்ர்.