மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இன்றைய ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா அபார சதம் போட்டும் கூட, இந்தியாவின் விறுவிறுப்பில்லாத பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான முத்தரப்பு தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று 2வது போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்தது.

ரோஹித் கோஹ்லி 9
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஷிகர் தவான் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல, ரஹானே 12 ரன்களில் வீழந்தார். இந்தியாவின் டெஸ்ட் தொடர் நாயகன் விராத் கோஹ்லி வெறும் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்தியா தடுமாற்றத்தைச் சந்தித்தது.
ஆனால் மறுபக்கம் ரோஹித் சர்மா பொறுப்பாகவும், சற்று அதிரடியாகவும் ஆடி ரன் குவித்து வந்தார். அவருக்குத் துணையாக சுரேஷ் ரெய்னா வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தி ரன் குவிப்பில் குதித்தனர். இதனால் இந்தியாவி்ன் ஸ்கோர்போர்டு சற்றே உயரத் தொடங்கியது.
ரெய்னா 51
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா 51 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பாக ஆடி சதம் போட்டார். அதையும் தாண்டி அவர் 138 ரன்கள் குவித்து விட்டுத்தான் ஓய்ந்தார். இதனால் இந்தியாவின் நிலை சற்றே மேம்பட்டது. இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 267 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச்சும், வார்னரும் அதிரடியாக தொடங்கினர். ஆனால் வார்னர் 24 ரன்களில் பொட்டியைக் கட்டினார். இதனால் பின்ச் கட்டையைப் போட ஆரம்பித்தார். வார்னர் போனதும் வந்த ஷான் வாட்சன் வேகமாக ஆடி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் கட்டையைப் போட்டபடி ஆடி வந்த பின்ச் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் ஸ்டீவன் ஸ்மித் 47 ரன்களைச் சேர்த்து அரை சதத்தை நெருங்கி ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் பெய்லியின் பங்கு 5 ரன்கள் மட்டுமே. கடைசி நேரத்தில் கிளன் மேக்ஸ்வெல் சற்று ஆடி 20 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலியாவின் நிலை மோசமாக இல்லை. விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் கடைசி நேரப் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் வெற்றி இலக்கான 268 ரன்களைத் தாண்டி 269 ரன்களை எட்டியது.
4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று இத்தொடரில் தனது 2வது வெற்றியைப் பதிவு செய்தது ஆஸ்திரேலியா. இந்தியா முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்கள வீழ்த்தினார். புவனஸ் குமார், ஷமி, அக்ஸர் படேல், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
வம்பிழுத்த வார்னர்
முன்னதாக இந்தியா தனது 23வது ஓவரை ஆடியபோது, இந்தியாவின் ரன் வேகத்தைக் கண்டு பொறுக்க மாட்டாமல் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ரோஹித் சர்மாவை வம்பிக்கிழுத்து பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
23வது ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சர்மா, பால்க்னர் வீசிய பந்தை சந்தித்தார். அதை அவர் அடித்தபோது பந்து வார்னரை நோக்கி ஓடியது. அவரும் அதை எடுத்து விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினை நோக்கி வீசினார். ஆனால் அவர் அதை சரியாக பிடிக்கத் தவறினார். இதனால் பந்து நழுவி ஓடியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா ஒரு ரன் ஓடினார்.
இதைப் பார்த்து கோபமடைந்த வார்னர், ஓவர் முடிவில் சர்மாவிடம் போய் கோபமாக எதையோ கூறினார். பதிலுக்கு ரோஹித் சர்மாவும் பேசினார். இதையடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது. குறுக்கே புகுந்த சுரேஷ் ரெய்னா வார்னரை அமைதிப்படுத்தினார். ஆனாலும் வார்னர் ஓய்வதாகத் தெரியவில்லை. இதையடுத்து நடுவர்கள் ஜான் வார்ட், குமார் தர்மசேனா, ஆஸ்திரேலியா கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் குறுக்கிட்டு அமைதிப்படுத்த வேண்டியதாயிற்று.