டாக்கா: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் நமிபியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட் செய்த நமிபியா இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 197 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஜூனியர் உலக கோப்பையின் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வென்ற இந்திய அணி காலிறுதியில் இன்று நமீபியா அணியை எதிர்கொண்டது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் இஷாந்த் கிஷான், பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்தார். சர்பராஸ் கான் 76, அர்மான் ஜாபர் 64, அன்மோல்பிரீத் சிங் 41 ரன்கள் குவித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்த நமிபியா, இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
39 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நமிபியா அணி, 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை சுவைத்தது.
நமிபியா தரப்பில் தொடக்க வீரர் நிகோ டேவின் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இந்தியாவின், மாயங்க் டாகர் மற்றும் அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ராகுல் பதம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி, கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணி, லீக் ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.