டாக்கா: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று அயர்லாந்தை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. முன்னதாக இந்தியா, முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் குவித்திருந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச பயணத்தை தவிர்ப்பதாக ஆஸ்திரேலிய அணி அறிவித்துவிட்டதால் கடைசி நேரத்தில் அயர்லாந்து சேர்க்கப்பட்டிருந்தது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா இல்லாதது இந்திய அணிக்கான கோப்பை கனவை நனவாக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஏற்கனவே இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, 3வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்தோடு களமிறங்கியது. இன்றைய போட்டியில் டாசில் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்தியா, 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி கட்டத்தில் அடித்தாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. சர்ப்ராஸ் கான் அதிகபட்சமாக 74 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 269 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடத்தொடங்கிய அயர்லாந்தை ரன் குவிக்க விடாமல் இந்திய பவுலர்கள் திறமையாக பந்து வீசினர். அந்த அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 79 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
ராகுல் பதாம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 ஓவர்கள் பந்து வீசிய அவர் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்தியா தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்தை வரும், 30ம் தேதி சந்திக்கிறது.