விளையாட விருப்பமில்லை என்றால்.. கிளம்பி செல்லுங்கள்.. ரஹானேவிடம் சொன்ன நடுவர்.. ஷாக்கிங் தகவல்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரஹானேவிடம் களநடுவர் பேசிய சில விஷயங்கள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பல சர்ச்சைகளுக்கு இடையில் நடந்து முடிந்துள்ளது. பல வீரர்கள் காயம் அடைந்த நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்கள் மீது இன ரீதியான தாக்குதல்களை நடத்தினார்கள். முக்கியமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய ரசிகர்கள் மீது இனரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல்
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களை குரங்கு என்று கூறி இன ரீதியாகவும், மதத்தை குறிப்பிட்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சிராஜ், பும்ரா, சைனி ஆகியோரை குறி வைத்து இதுபோன்ற இனவெறி தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

சிராஜ்
சிராஜ்தான் அதிகமாக இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார். இந்திய வீரர் சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறியுள்ளனர். சிராஜ் தனது வருத்தத்தை முகத்தில் வெளிப்படையாக காட்டினார். இதையடுத்து சிராஜ் நேராக சென்று கேப்டன் ரஹானேவிடம் புகார் அளித்தார்.

ரஹானே புகார்
இதையடுத்து ரஹானே நேரடியாக சென்று நடுவரிடம் புகார் அளித்தார். ஆனால் நடுவர் முதலில் ரஹானேவிற்கு ஆதரவாக பேசவில்லை என்கிறார்கள். நீங்கள் வெளியே செல்ல விரும்பினால் செல்லலாம். ஆட்டத்தில் தொடர்ந்து ஆட விரும்பவில்லை என்றால் நீங்கள் வெளியேறலாம்.

கட்டாயம் இல்லை
உங்களால் இந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்றால் நீங்கள் வெளியேறலாம் என்று ரஹானேவிடம் நடுவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் ரஹானேவோ நாங்கள் கண்டிப்பாக ஆடுவோம். நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு விளையாட வந்து இருக்கிறோம்.

மாற்றம் இல்லை
எங்களுக்கு விளையாட்டுதான் முக்கியம். அந்த ரசிகர்களை வெளியேற்றுங்கள். நாங்கள் தொடர்ந்து ஆடுகிறோம், என்று ரஹானே குறிப்பிட்டு இருக்கிறார்.இதை தொடர்ந்தே ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.


Click it and Unblock the Notifications