மொஹாலி : சையது முஸ்தாக் கிரிக்கெட் தொடரில் உம்ரான் மாலிக் அசுர வேகத்தில் பந்துவீசிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான பந்துவீச்சால் ரசிகர்களை கவர்ந்த உம்ரான் மாலிக், அயர்லாந்து தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.
எனினும் உம்ரான் மாலிக்கிற்கு அனுபவம் போதவில்லை என்று கூறி, அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இதனால் உத்வேகம் குறைந்த உம்ரான் மாலிக், உள்நாட்டு போட்டி மற்றும் இந்திய ஏ தொடரில் சொதப்பினார். இந்த நிலையில், உம்ரான் மாலிக் தன்னுடைய பழைய பார்மை மீட்டார். இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு உம்ரான் மாலிக்கை அனுப்ப பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால் விசா பிரச்சினை காரணமாக உம்ரான் மாலிக்கால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து உம்ரான் மாலிக், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடினார். இதில் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சை உம்ரான் மாலிக் வெளிப்படுத்தினார் உம்ரான் மாலிக் வேகத்தை கண்டு மகாராஷ்டிர வீரர்கள் பயந்து நடுங்கிய அளவுக்கு பந்துவீச்சு இருந்தது.
குறிப்பாக, அவர் வீசிய ஒரு பந்தில் 2 ஸ்டம்புகள் சிதறியது. உம்ரான் மாலிக் அந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 27 ரன்களை விட்டு கொடுத்தார். இதுவரை 5 போட்டியில் விளையாடியுள்ள உம்ரான் மாலிக் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு 7.31 ரன்களை வழங்கி இருக்கிறார்.