”உம்ரான் மாலிக்” எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக வீசு.. அட்வைஸ் செய்த இந்திய ஜாம்பவான்!
மும்பை: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் எக்காரணத்தை கொண்டு தனது வேகத்தை குறைத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் அறிவுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது.
இந்த தோல்விக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான பவுலிங்கும், திட்டத்திற்கேற்ப செயல்படாததுமே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்திய பேட்டிங்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 80, தவான் 72, சுப்மன் மில் 50, சுந்தர் 37* ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி, ஃபெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நியூசிலாந்து வெற்றி
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 4வது விக்கெட்டிற்கு கூட்டணி அமைத்த கேப்டன் வில்லியம்சன் - டாம் லேதம் 221 ரன்களுக்கு சேர்த்தனர். லேதம் 104 பந்துகளில் 145 ரன்களும், வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 47.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

உம்ரான் மாலிக்
இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், அறிமுக போட்டியிலேயே உம்ரான் மாலிக் பந்துவீசிய விதம் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 10 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை எடுத்ததோடு, 67 ரன்கள விட்டுக்கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் முதல் ஓவரிலேயே 153 வேகத்தில் உம்ரான் மாலிக் வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஜாகீன் கான் வரவேற்பு
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் கூறுகையில், இளம் வீரரான உம்ரான் மாலிக் தன் திறமை மீது நம்பிக்கை வைத்து பந்துவீச வேண்டும். அதேபோல் எந்த காரணத்திற்காகவும் வேகமாக வீசுவதை தவிர்க்க தேவையில்லை. உம்ரான் மாலிக்கை இந்திய அணி விக்கெட் டேக்கராக பார்க்க வேண்டும். அவர் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுப்பார். ஆனால் இந்திய அணி அவருக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்து, அவரை கூர் தீட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications