
தோனி சபதம்
ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லாமல் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு வெளியேறியது. அப்போதும் கூட தோனியின் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள், நாங்கள் இருக்கிறோம் 'தல' என்று கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அனைவருக்கும் தோனி சொன்ன பதில், " CSK will Come back stronger". அதாவது "சிஎஸ்கே மிகவும் பலமாக திரும்பி வரும்" என கூறியிருந்தார்.

தரமான கம்பேக்
கொடுத்த வாக்கை காப்பாற்ற, 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியையும் பந்தாடி வெற்றிகளை பெற்றார் எம்.எஸ்.தோனி. டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என இளம் படைகளை கொண்ட அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் கெத்து காட்டியது. ஆனால் மும்பையிடம் மட்டும் மீண்டும் தோல்வியடைந்து சிறிது சறுக்கியது.

மீண்டும் கர்ஜனை
அடிவாங்கிய சிஎஸ்கே மீண்டும் சரிவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமீரகத்தில் மிக பலமாக கர்ஜித்தது என்றே கூறலாம். தோனி என்ற தனி நபரின் மாஸ்டர் ப்ளானால் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தியது. இதில் மற்றொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், தோனியின் ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது தான்.

என்ன காரணம்
2021ம் ஆண்டு தொடர் முழுவதும் சிஎஸ்கே சிறப்பாக விளையாடிய போதும், தோனி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்தார். இனி அவரின் அதிரடியை காண முடியாதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்க, மிக முக்கியமான அரையிறுதி போட்டியில் ஃபார்முக்கு திரும்பினார். சிஎஸ்கே அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரிந்துவிட, தோனி மட்டுமே அணியை தூக்கி நிறுத்தினார்.

கடைசி ஓவர்
கடைசி ஓவரில் தோனி சிதறடித்த பவுண்டரிகளை சிஎஸ்கே ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்செல்லக்கூடிய கடைசி வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திய தோனி, தன் மீது இருந்த விமர்சனங்களையும் துடைத்தெறிந்தார். இதன் மூலம் தான் சிஎஸ்கேவின் வெற்றி சாத்தியமானது. இதுமட்டுமல்லாமல் தோனியின் மேற்பார்வையில் இருந்த ருதுராஜ் கெயிக்வாட், 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற விருதை பெற்றார். மிகவும் இளம்வயதில் இந்த பெருமை பெற்றவர் கெயிக்வாட் மட்டுமே.

சோகமான மறுபக்கம்
இந்தாண்டு சிஎஸ்கேவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்திருந்தாலும், மற்றொரு புறம் கசப்பான சம்பவங்களும் நடந்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த அணி ஜடேஜா, தோனி, கெயிக்வாட், மொயின் அலி ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டது. முக்கிய வீரர்களான ரெய்னா, டூப்ளசிஸ், பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார் ஆகியோரை கழட்டிவிட்டது. எனினும் இவர்கள் அனைவரையும் மீண்டும் அணிக்கு கொண்டு வரும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











