வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் உலக சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் 15 வயதில் அபாரம்.. இன்று படைத்த 2 ரெக்கார்ட்
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இன்று மீண்டும் புதிய சாதனைகளைப் படைத்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஒரே டி20 தொடரில் அதிக பவுண்டரிகள் விளாசிய உலக சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டபோது வைபவ் இந்த மகத்தான சாதனையைப் படைத்தார். நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அவர் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த போது அவரின் சிறப்பான ஆட்டம் தொடர்ந்து வருகிறது.

அப்போது 14-வது ஓவரின் முதல் பந்தில் தனது ஒன்பதாவது பவுண்டரியை அடித்து, ஜோஸ் பட்லரின் 128 பவுண்டரிகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தார். இதன் மூலம், ஒரே ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 129 பவுண்டரிகளை எட்டி, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2022 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 863 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையுடன் ஜோஸ் பட்லர் விளங்கினார். அந்தத் தொடரில் அவர் 83 நான்குகள், 45 சிக்ஸர்கள் உட்பட 128 பவுண்டரிகளை அடித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் 2026-ல், வைபவ் சூரியவன்ஷி இதுவரை 62 நான்குகள், 67 சிக்ஸர்கள் உட்பட 129 பவுண்டரிகளைக் குவித்துள்ளார்.
பவுண்டரி சாதனையை மட்டும் அவர் படைக்கவில்லை. 15 வயது 63 நாட்களில், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 700 ரன்களைக் கடந்த இளம் வீரர் என்ற பெருமையையும் வைபவ் சூரியவன்ஷி தனதாக்கிக் கொண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், மே 29 அன்று தனது ரன் எண்ணிக்கையை 711 ஆக உயர்த்தினார்.
இதற்கு முன், இந்த சாதனை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பி. சாய் சுதர்சன் வசம் இருந்தது. அவர் ஐபிஎல் 2025 தொடரில் 700 ரன்களை எட்டியபோது 23 வயது 227 நாட்கள் நிரம்பியவராக இருந்தார். இளம் வயதிலேயே வைபவ் இந்த சாதனையை எட்டியிருப்பது, அவரது திறமைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.
ஐபிஎல் 2026 ஆரஞ்சு கேப் பந்தயத்தில் வைபவ் சூரியவன்ஷி தற்போது முன்னணியில் உள்ளார். இத்துடன், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 700 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அன்-கேப்ட் வீரர் (என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இத்தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக, வைபவ் வெறும் 29 பந்துகளில் மின்னல் வேகத்தில் 97 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இந்தப் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்த எலிமினேட்டர் ஆட்டத்தில், 15 வயதான வைபவ் ஐந்து நான்குகளையும், 12 அற்புதமான சிக்ஸர்களையும் விளாசினார். இந்த அதிரடி ஆட்டம், 243/8 என்ற பெரிய ஸ்கோரை எட்ட உதவியதால், அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் அதே மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications

