மும்பை: இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திர வீரராக உருவெடுத்திருக்கிறார் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதிலேயே சர்வதேச பவுலர்களின் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்து 35 பந்துகளில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தாம் விளையாடிய முதல் போட்டியிலேயே 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்து இருந்தார். இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் 59 பந்துகளில் அதிவேக சதம் ஒன்றை சூரியவன்சி அடித்திருந்தார்.

இதனால் தற்போது சூரியவன்ஷி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 90 பந்துகளில் 190 ரன்களை அவர் குவித்து இருந்தார் என செய்திகள் வெளியானது. இந்த சூழலில் ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால் வைபவ் சூரியவன்சியை நடப்பாண்டிலேயே இந்திய அணிக்கு கொண்டு வரலாம் என பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது 16 வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்ததால், அதேபோல் சூரியவன்ஷியையும் முன்பே கொண்டு வரலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வருகின்றனர். ஆனால் சூரியவன்சி விஷயத்தில் சச்சின் போல் அவசரம் காட்டக் கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடாபதி ராஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சூரியவன்சி இன்னும் இந்திய அணிக்கு அறிமுகமாக சில காலம் பிடிக்கும் என நினைக்கின்றேன். தற்போது நடைபெற உள்ள அண்டர் 19 உலக கோப்பை தொடரில் சூரியவன்சி சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இதேபோன்று உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் சூரியவன்சி அதிகம் விளையாட வேண்டும். அவருடைய திறமையை நாம் அனைவரும் பார்த்து விட்டோம். எனினும் சிவப்பு நிற கிரிக்கெட் பந்தில் என்ன அவரால் செய்ய முடியும் என்பதை காட்ட வேண்டும்.அது மட்டும் இல்லாமல் ஒரு போட்டியில் விளையாடும் வீரர் நமக்கு தேவையில்லை.
தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரி விளையாடும் வீரர் தான் நமக்கு தேவை. சச்சின் டெண்டுல்கரை பற்றி நாம் இன்றும் பேசுகிறோம் என்றால், அவர் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை என உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அனைத்திலுமே சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவருடைய திறமை அனைவருக்கும் புலப்பட்டது. இதே போல் வைபவ் சூரியவம்ஷி தன்னுடைய திறமையை நிரூபிக்க நாம் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என்று வெங்கடபதி ராஜு தெரிவித்துள்ளார்.