மும்பை: பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும். அவரை அடுத்த சச்சினாக மாற்ற வேண்டும் என கூறி இருக்கிறார் அவரது ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ்-இன் உயர் செயல்திறன் இயக்குனர் ஜுபின் பரூச்சா. "சச்சினுக்கு அன்று செய்தது போல, இவரையும் உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும்" என்று தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார் ஜுபின். குறிப்பாக வயது விஷயத்தை வைத்து தான் இவ்வாறு கூறி இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 16-வது வயதில் இந்திய சீனியர் அணியில் அறிமுகமானார். ஆனால், இப்போது 14 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷி, அதற்கு முன்பே கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை உடைக்கத் தொடங்கிவிட்டார்.
ஐபிஎல்-ல் அதிவேக சதம்: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

யூத் கிரிக்கெட் சாதனை: ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு எதிராக யூத் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான யூத் ஒருநாள் போட்டியிலும் அதிவேகச் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
வைபவின் திறமையைப் பார்த்து வியந்துபோன ஜுபின் பரூச்சா, "இந்த பையனை உடனடியாகச் சீனியர் அணியில் சேர்த்து ரத்தம் பாய்ச்ச வேண்டும் (Blooded). அவர் ஒரு தனி இடத்தில் இருக்கிறார். குறைந்தபட்சம் அவரை இந்தியா 'ஏ' சுற்றுப்பயணத்திற்காவது உடனடியாக அனுப்புங்கள். தற்போது இந்தியா 'ஏ' அணியுடன் விளையாட வந்துள்ள ஆஸ்திரேலியப் பந்துவீச்சுக்கு எதிராக அவர் விளையாடியிருந்தால், நிச்சயம் இரட்டைச் சதம் அடித்திருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
வைபவின் திறமைக்குச் சான்றாக, ஜுபின் பரூச்சா ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் குறிப்பிட்டு கூறி இருக்கிறார். 2025 ஐபிஎல் சீசனின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலைப்பயிற்சியில், இங்கிலாந்தின் அதிவேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை, 14 வயது வைபவ் எதிர்கொண்டிருக்கிறார்.
பரூச்சா கூறுகையில், "ஆர்ச்சர், வைபவுக்குப் பந்துவீசியபோது எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், இந்தச் சிறுவன், பேக்-ஃபூட்டில் அடித்த ஒரு ஷாட், மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. ஆர்ச்சர் உட்பட அங்கிருந்த அனைத்துப் பயிற்சியாளர்களும் ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டனர்" என்று அந்த மிரட்டலான தருணத்தை பரூச்சா விவரித்தார். ஒரு 14 வயது சிறுவன், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆர்ச்சரையே அஞ்சாமல் எதிர்கொண்டு, மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த சம்பவம், அவரது மனஉறுதியையும், அசாத்திய திறமையையும் காட்டுகிறது என்றார்.
1980-களில் சச்சினுக்காக எடுக்கப்பட்டது போன்ற ஒரு துணிச்சலான முடிவை, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வைபவ் சூர்யவன்ஷிக்காகவும் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா?