மும்பை: 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் இவரது அதிரடியைக் கண்டு சீனியர் பந்துவீச்சாளர்கள் அச்சமடைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்பச் செய்தவர் வைபவ். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இந்திய ஏ அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா, வைபவ் குறித்து வியக்கத்தக்க பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். "அவன் ஒரு குட்டி ஹல்க் போல இருக்கிறான். அவனது மணிக்கட்டுகள் என்னை விடப் பெரியவை. ஒருமுறை எனது கடிகாரத்தை அவனிடம் கொடுத்தபோது அது அவனுக்கு சற்று சிறியதாக இருந்தது. அந்த அளவிற்கு அவனிடம் இயற்கையாகவே அபார வலிமை உள்ளது" என்று ஜித்தேஷ் கூறியுள்ளார்.

மேலும் ஜிதேஷ் கூறுகையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி மையத்தில் பந்துவீசும் வீரர்கள் வைபவ்வுக்கு நேராகப் பந்துவீசவே பயப்படுகிறார்கள். வைபவ் பந்துகளை நேராக அடிக்கும் வேகம், தங்கள் உயிரையே பறித்துவிடுமோ என்ற அச்சத்தில் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் விபத்துகளைத் தவிர்க்க பந்துவீச்சாளர்கள் அவருக்கு நேராகப் பந்துவீசாமல், ஷார்ட் பால் வீசி தங்களைக் காத்துக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு 14 வயதிலேயே பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஒரு பயத்தை வைபவ் உருவாக்கியுள்ளார் .
2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக வைபவ் தனது 15-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக அவர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் இல்லாத இடத்தை நிரப்பப் போகும் வைபவ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரியான் பராக் ஆகிய இளம் வீரர்களுடன் இணைந்து அதிரடி காட்டத் தயாராகி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் போன்ற அதிரடி ஆட்டத்தை வைபவ் வெளிப்படுத்துவதாக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 14 வயதிலேயே சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்களைத் திணறடிக்கும் வைபவ், 2026 ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
