"சச்சினுக்கு நேர்ந்த கதி வைபவ்வுக்கும் வந்துவிடக் கூடாது".. சூர்யவன்ஷி குறித்து கல்லினன் எச்சரிக்கை
சென்னை: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமுறை மற்றும் தொடர்ச்சியான போட்டிகள், அவருக்கு சச்சின் டெண்டுல்கரைப்போல் குறிப்பிட்ட வகையான காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கல்லினன் எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மற்றும் இலங்கை முத்தரப்பு தொடரில் அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் அயர்லாந்து தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக உள்ளார்.
அவரது அதிவேக பேட்டிங் திறன் பலரையும் வியக்க வைத்தாலும், அவரது மணிக்கட்டு மற்றும் முழங்கை மூட்டுகள் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்வதாக டேரில் கல்லினன் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கல்லினன் எழுதியதாவது: "வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் என்னை வியக்க வைத்தாலும், அவரது காயங்கள் குறித்து எனக்கு கவலை உள்ளது. 15 வயதில் கனமான பேட்டை அசுர வேகத்தில் வீசி, இடைவிடாமல் கிரிக்கெட் விளையாடுவது அவரது மணிக்கட்டு மற்றும் முழங்கை மூட்டுகளைப் பாதிக்கும்."

"2004 இல் சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட கடுமையான டென்னிஸ் எல்போ காயம் அவரது வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டுவரும் நிலைக்குத் தள்ளியது. சச்சின்கூட வைபவ் அளவுக்கு இவ்வளவு ஆக்ரோஷமாக தொடர்ந்து பந்துகளை அடித்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "வைபவ் இன்னும் வளரும் பருவத்தில் இருக்கிறார். அவரது தசைநார்கள், தசைகள் மற்றும் மூட்டுகள் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. தற்போதைய கிரிக்கெட் சூழலில் கனமான பேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் போட்டிகளின் அட்டவணையும் மிக நெருக்கமாக உள்ளது. 14 ஐபிஎல் போட்டிகள், இலங்கை தொடர் மற்றும் அயர்லாந்து தொடர் என அவர் ஓய்வில்லாமல் விளையாடுகிறார். 16 வயதை தொடுவதற்கு முன்பாகவே இவ்வளவு சுமை அவரது உடலை கடுமையாக பாதிக்கும். நவீன உடற்பயிற்சி முறைகள் உதவினாலும், அவரது நீண்ட கால எதிர்காலம் மற்றும் உடற்தகுதி குறித்து எனக்கு அச்சம் உள்ளது" என்று கல்லினன் எச்சரித்துள்ளார்.
அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரை விட இளம் வயதில் சர்வதேச அறிமுகம் பெற்ற இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

