ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் டி20 வரலாறு படைத்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அவரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் ஜாம்பவான்களான பிரையன் லாரா, யுவராஜ் சிங், குமார் சங்ககாரா, ஷிகர் தவான், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என பலரும் அவரை பாராட்டியுள்ளனர். அவர்கள் வைபவ் சூர்யவன்ஷி குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டு பதிவில், "பயமே இல்லாத அணுகுமுறை வைபவ் உடையது. பேட்டின் வேகம், பந்து வரும் தூரத்தை சற்று முன்பே கணித்து அணுகுவது, பந்தின் மீது தனது முழு சக்தியையும் இறக்குவது என எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸாக அமைந்தது. நன்றாக ஆடினாய்!" என பாராட்டியுள்ளார்.

பிரையன் லாரா தனது பதிவில், "இந்த ஆட்டத்தைப் பார்த்து நான் மகிழ்ந்தேனா? நிச்சயமாக! நீங்கள் என்னை மகிழ்ச்சி அடைய வைத்தீர்கள்," என்று கூறியுள்ளார். வைபவின் ஆதர்ச நாயகன் பிரையன் லாரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் தனது பதிவில், "நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? இந்த சிறுவன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் விலாசி இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பயமே இல்லாத அணுகுமுறை. அடுத்த தலைமுறை சிறப்பாக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார்."
முகமது ஷமி தனது பாராட்டு பதிவில், "வைபவ் சூர்யவன்ஷி! என்ன ஒரு அற்புதமான திறமை! 14 வயலில் சதம் அடிப்பது என்பது நம்ப முடியாத விஷயம். தொடர்ந்து சிறப்பாக ஆடுங்கள் சகோதரரே" என்று கூறியுள்ளார்.
ரோகித் சர்மா ஒரே ஒரு வார்த்தையில் "கிளாஸ்!" என்று பாராட்டி இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் தனது பதிவில், "இந்த இளம் வீரரின் துவம்சத்தைப் பார்த்தேன். முற்றிலும் வெறியாட்டம்!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான குமார் சங்கக்கார தனது பதிவில், "என்ன ஒரு ஆட்டம்!" என்று வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஷிகர் தவான் தனது பதிவில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்ன மாதிரியான ஆட்டத்தை ஆடியது! இளம் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ஒரு இந்தியரின் அதிவேக சதத்தை அடித்துள்ளார். அதுவும் 14 வயதில் அடித்திருக்கிறார்!" என்று பாராட்டி இருக்கிறார்.