ஐபிஎல் 2021 தொடர்
அடுத்தடுத்த அணி வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பையடுத்து ஐபிஎல் 2021 தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு சென்றுள்ளனர். 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.
கேகேஆர் வீரர்களுக்கு பாதிப்பு
தொடர்ந்து 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்த கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன.
பிசிசிஐ விவாதம்
ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாகவே தள்ளி வைத்துள்ளதாகவும் தொடர் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து தொடரின்போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கேகேஆர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கேகேஆர் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
அவர்கள் இருவருக்கும் தற்போது கொரோனா நெகட்டிவ் உள்ள நிலையிலும் அவர்களை தொடர்ந்து கேகேஆர் அணி கண்காணிக்கும் என்றும் அவர் சொந்த ஊர்களுக்கு சென்ற பின்பும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.