தோனியை பரிந்துரைத்த விபி சந்திரசேகர் உயிரை பறித்த அந்த விஷயங்கள்...!! அதிர்ந்த கிரிக்கெட் உலகம்
சென்னை: இந்திய கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த விபி சந்திரசேகர் கடன் தொல்லையால் தமது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர். ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை ரசிகர்களுக்கு அப்படியே சுவாரசியமாக கொண்டு சேர்த்த வர்ணனை யாளர்களில் முக்கியமானவர் வி.பி சந்திரசேகர். 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சென்னையில் பிறந்த வக்கடை பிக்சேஸ்வரன் சந்திரசேகர், அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி.
சிறு வயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வம். அது தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடுவது வரை கொண்டு சேர்த்தது. ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் விளங்கினார்.

காஞ்சி வீரன்ஸ் அணி
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர். ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சந்திரசேகர். ஏன் என்றால் அந்த நேரத்தில் எல்லாரும் சேவாக்கை அணிக்காக வாங்குமாறு வற்புறுத்தினர். ஆனால், அதை புறந்தள்ளி தோனியை கொண்டு வந்தார்.

ரஞ்சி தொடர்
அதிரடி தொடக்க வீரரான வி.பி.சந்திரசேகர் 1987-88ல் தமிழ்நாடு ரஞ்சி டிராபியை வென்ற போது அரையிறுதியில் உ.பி.அணிக்கு எதிராக 160 ரன்களையும், இறுதியில் ரயில்வேஸ் அணிக்கு எதிராக 89 ரன்களையும் எடுத்தவர். இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார் இதில் 53 ரன்கள் அதிகபட்சம்.

வர்ணனை, அகாடமி
81 முதல் தர போட்டிகளில் 4,999 ரன்களை 10 சதங்களுடன் எடுத்தார். ஒரு கட்டத்தில் கோவா அணிக்கு ஆடினார். தமிழ்நாடு அணியையும் வழிநடத்தி உள்ளார். ஓய்வுக்கு பிறகு பயிற்சி மற்றும் வர்ணனையில் கவனம் செலுத்தி வந்தார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியை வாங்கி நிர்வகித்து வந்தார். வேளச்சேரியில் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வந்தார்.

கடன் நெருக்கடி
இந் நிலையில், சில தினங்களாக நிதி சுமையில் சிக்கி வந்த இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் விபி சந்திரசேகர் மாடிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் கீழே வர வில்லை.

குடும்பத்தினர் அதிர்ச்சி
அதனால், அங்கே சென்று பார்த்த அவரது குடும்பத்தினர், அவர் வேட்டியில் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக காணப்பட்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தெரியப்படுத்தினர். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர்.

தற்கொலையா என ஆய்வு
தற்கொலைக்கு காரணம் நிதி நெருக்கடி என்று முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கடன் பிரச்சினையா அல்லது நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது போன்ற கோணத்தில் போலீசார் முதல்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர்.

வீடு அடமானம்
அவரது வீடு முதற்கொண்டு அடமானத்தில் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கூட, அவர் கடன் வாங்கிய வங்கியிலிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி தான் தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவரது செல்போன் உரையாடல்களும் ஆய்வுக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications