
அக்.17 முதல்
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்தியா vs பாகிஸ்தான்
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஹர்திக் பாண்ட்யா
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.

ஒரு ஓவர் கூட
இந்நிலையில், நாளை (அக்.10) உலகக் கோப்பைக்கான இறுதி அணியை ஐசிசி-யிடம் அனைத்து அணிகளும் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாளாகும். இதில், இந்திய அணியில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா ஃபார்ம் குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் அவர் ஒரு ஓவர் கூட பந்தும் வீசவில்லை. அவரது பலமே ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் என்பது தான். அவரைப் போல பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாச, ஆயிரக்கணக்கான வீரர்கள் வெளியே வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

சிக்ஸர் அடிக்க முடியல
ஆனால், பாண்ட்யா தனது ஆல்ரவுண்டர் திறனை இழந்து வெகு நாளாகிவிட்டது. முதுகு வலி காரணமாக, அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதில் இருந்து பந்து வீச முடியாமல் திணறி வருகிறார். இந்த ஐபிஎல் தொடருக்குள் எப்படியும் மீண்டும் பந்து வீச ஆரம்பித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கான முயற்சி என்ன மேற்கொண்டார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. அட்லீஸ்ட் போட்டியின் போது, ஒன்றிரண்டு ஓவர்கள் வீசியிருந்தாலாவது ரசிகர்கள் அதனை பார்த்திருக்க முடியும். ஆனால், பவுலிங்கும் வீசவில்லை. பேட்டிங்கும் முன்பு போல் இல்லை. சிக்ஸர் அடிக்கக் கூட சிரமப்பட்டார்.

வெங்கடேஷுக்கு வாய்ப்பு?
இந்த நிலையில் அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றால், நிச்சயம் அணிக்கு சுமையாக இருப்பார் என்பது உறுதி. அவரை ஸ்குவாடில் வைத்துக் கொண்டு, போட்டியில் களமிறக்காமலும் இருக்க முடியாது. இந்த சிக்கல்களை தவிர்க்க, கேகேஆர் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய 'ஆல் ரவுண்டர்' வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. வெங்கடேஷ் ஐயர் மிதமான வேகத்தில், நல்ல எகானமியில் பந்தும் வீசியிருக்கிறார். இதனால் அவரை பாண்ட்யாவுக்கு பதில் வெங்கடேஷ் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், வெங்கடேஷ் ஓப்பனராக விளையாடி வருபவர், அவரை எப்படி பாண்ட்யா இடத்தில் களமிறக்க முடியும்? என்று கேள்வியும் எழாமல் இல்லை.


Click it and Unblock the Notifications











