மும்பை: இந்திய கிரிக்கெட் உலகின் இரு துருவங்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இன்று உள்ளூர் ஒருநாள் தொடரில் களமிறங்குகிறார்கள். ஆனால், அதைப் பார்க்கத் தான் வழியில்லை. "உலகக்கோப்பை ஃபைனலுக்குக் கூட இவ்வளவு டென்ஷன் ஆனதில்லைங்க.. ஆனா இந்த உள்ளூர் மேட்சை பார்க்க முடியாம நாங்க படுற பாடு இருக்கே.." என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
விஜய் ஹசாரே டிராபி தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கின்றன. இதில் டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோஹித் சர்மாவும் களமாடுகிறார்கள். ஆனால், "ஸ்டார் ஸ்போர்ட்ஸை திருப்பினாலும் மேட்ச் வரல.. ஜியோ ஹாட்ஸ்டாரில் தேடினாலும் மேட்ச் வரல.. என்னடா நடக்குது இங்க?" என்பதுதான் ரசிகர்களின் புலம்பலாக இருக்கிறது.

இன்று நடக்கும் ஆட்டத்தில் பெங்களூருவில் டெல்லி அணி குஜராத்தை எதிர்கொள்கிறது. அதேபோல, மும்பை அணி உத்தரகாண்ட் அணியை எதிர்த்து ஆடுகிறது. இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. முதல் சுற்றில் ரோஹித் ஆடிய ஜெய்ப்பூர் மைதானத்தில் சுமார் 15,000 ரசிகர்கள் திரண்டனர். பெங்களூரில் கோலி ஆடிய போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், மைதானத்திற்கு வெளியே இருந்த மரங்களின் மீது ஏறி நின்றெல்லாம் ரசிகர்கள் போட்டியை ரசித்தனர்.
சரி, நேரில் தான் பார்க்க முடியவில்லை, டிவியிலாவது காட்டுவார்கள் என்று பார்த்தால் அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. பிசிசிஐ வெறும் 4 நிமிட ஹைலைட்ஸ் வீடியோவை மட்டும் வெளியிட்டு, "இப்போதைக்கு இத வச்சு அட்ஜஸ்ட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டது.
சரி, இரண்டாவது போட்டியிலாவது லைவ் டெலிகாஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறையும் 'பெப்பே' தான் காட்டியுள்ளது பிசிசிஐ. இன்று நடக்கும் கோலி (டெல்லி vs குஜராத்) மற்றும் ரோஹித் (மும்பை vs உத்தரகாண்ட்) ஆகியோரின் போட்டிகள் இரண்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் இன்று ஒளிபரப்பப்படும் போட்டிகள் ஜார்க்கண்ட் vs ராஜஸ்தான் மற்றும் அசாம் vs ஜம்மு காஷ்மீர் ஆகும். இதைப் பார்த்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர்.
"உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளூர் போட்டியில் ஆடுவதே அரிது. அப்படி ஆடும்போது அதைப் பார்க்க ஏற்பாடு செய்யாமல், சம்பந்தமே இல்லாத வேறு போட்டிகளை ஒளிபரப்புவது என்ன நியாயம்?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "கோலி கவர் டிரைவ் அடிப்பதையும், ரோஹித் புல் ஷாட் அடிப்பதையும் பார்க்க மரத்தில் ஏறியாவது பார்க்க வேண்டிய நிலைமைதான் போல! பிசிசிஐ மனசு வைக்குமா?" என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.