மும்பை: மும்பை அணியில் இருந்து இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து தகவல் வெளி வந்துள்ளது. விக்னேஷ் புத்தூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சீசன் அவரால் விளையாட முடியாது என்பதால் மும்பை அணி இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல் காயத்திற்கான சிகிச்சையை முழுமையாக மும்பை அணி நிர்வாகம் ஏற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக இம்பேக்ட் பிளேயராக விக்னேஷ் புத்தூர் களமிறக்கப்பட்டார். சிறப்பாக ஆடிய விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த சீசனில் 5 போட்டிகளில் ஆடிய விக்னேஷ் புத்தூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான தோனியே விக்னேஷ் புத்தூரை பாராட்டி இருந்தார். இதனால் விக்னேஷ் புத்தூர் மும்பை அணியில் தொடர்வார் என்று கருதப்பட்டது. ஆனால் மும்பை அணி ரிலீஸ் செய்த 9 வீரர்கள் பட்டியலில் விக்னேஷ் புத்தூர் பெயர் இருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் திறமையான இளம் வீரரான விக்னேஷ் புத்தூரை வேறு அணிகள் வாங்குவார்கள் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டாலும், விக்னேஷ் புத்தூர் மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பும் வரையிலான அத்தனை செலவுகளையும் மும்பை அணி ஏற்றுள்ளது.
மருத்துவமனை தொடங்கி பயிற்சி வரை விக்னேஷ் புத்தூர் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப அத்தனை உதவிகளையும் மும்பை அணி நிர்வாகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே விக்னேஷ் புத்தூரை கண்டறிந்த மும்பை அணி, ரஷீத் கான் உடன் பயிற்சி செய்வதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி தயார் செய்தது.
இதனால் விக்னேஷ் புத்தூரை அவ்வளவு எளிதாக மும்பை அணி நிர்வாகம் கைவிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு இளம் வீரர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.