மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த கேரள வீரர் விக்னேஷ் புத்தூர், ஐபிஎல் தொடர் துவக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட போதும், அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு மீண்டும் தேடி வந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது, இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருந்தார். அப்போது அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அதன் பிறகு சில போட்டிகளில் விளையாடிய அவர், பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக உத்தர பிரதேச வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான கரண் சர்மா அணியில் இடம் பெற்று வந்தார். கரண் சர்மா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனால், அடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அவரே விளையாடினார். இந்த இரண்டு போட்டிகளிலும் விக்னேஷ் புத்தூருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கரண் சர்மா ஃபீல்டிங் செய்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், அவரால் அந்தப் போட்டியில் பந்து வீச முடியாமல் பாதியிலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். காயம் காரணமாக கரண் சர்மா பந்துவீச முடியாமல் போனதால், மும்பை இந்தியன்ஸ் அணி சுழற்பந்துவீச்சுத் தாக்குதலைச் சமாளிக்க மாற்று வழிகளை நாட வேண்டியிருந்தது.
தற்போது கரண் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 20 அன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் விக்னேஷ் புத்தூர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
விக்னேஷ் புத்தூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தான் ஐபிஎல்லில் அறிமுகமானார் என்பதும், அந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு 32 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டு இருந்ததால், கரண் சர்மாவுக்கு பதிலாக விக்னேஷ் புத்தூர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.