சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் உச்சகட்ட அரசியல் நிலவியது அடித்து ரஞ்சிக் கோப்பை தொடர்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் விலகி இருக்கின்றார். 34 வயதான விஜய் சங்கர் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்கு விளையாடி வருகிறார்.
சென்னையில் பிறந்த விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பை, தியோதர் கோப்பை, சையது முஸ்தாக் அலி கோப்பையை கேப்டனாக தமிழ்நாடு அணிக்கு வென்று தந்திருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு ரஞ்சி அணியில் அறிமுகமான விஜய் சங்கர், ரஞ்சி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

இதுவரை தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக 81 இன்னிங்ஸில் விளையாடி உள்ள விஜய் சங்கர், 3142 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 11 சதம், 16 அரை சதமும் அடங்கும். ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் வேகபந்துவீச்சில் 43 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 2014 -2015 ரஞ்சி சீசனில் 11 இன்னிங்ஸில் 577 ரன்கள் அடித்திருந்தார்.
இதன் மூலம் இந்திய ஏ அணியில் அடிக்கடி இடம் பெற்று வந்த விஜய் சங்கர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடினார். இந்த நிலையில் விஜய் சங்கருக்கும் தமிழக கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விஜய் சங்கர் கடந்த சீசனில் பிளேயிங் லெவனின் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார்.
முதல் இரண்டு ரஞ்சிக் கோப்பை போட்டி மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் என அனைத்திலும் விஜய் சங்கர் சேர்க்கப்படாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த விஜய் சங்கர் 2025- 26 சீசனுக்கு முன்பு தமிழ்நாடு அணியில் இருந்து விலக முடிவெடுத்தார். இதற்கான தடையில்லா சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் தற்போது அவர் குஜராத் கிரிக்கெட் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
தமக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள்,மைதான ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது 13 வயதில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் விளையாடி வருகின்றேன். தற்போது புதிய பயணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று விஜய் சங்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பாபா அப்ரஜித் கேரள அணிக்கு விளையாடிய நிலையில் தற்போது விஜய் சங்கர் விலகி உள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக ஆம்ப்ரீஸ் என்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரர் தமிழ்நாடு அணியில் இடம்பெற உள்ளார். தமிழ்நாடு அஞ்சி அணியில் பயிற்சியாளராக இருந்த பாலாஜிக்கு பதில் முன்னாள் ரஞ்சி கோப்பை சாம்பியன் ஆன செந்தில்நாதன் புதிய பயிற்சியாளராக நடப்பு சீசனில் தனது பணியை தொடங்க உள்ளார். இதே போன்று முன்னாள் இந்திய வீரர் குமரன் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைகின்றார். அமெரிக்காவில் பயிற்சியாளராக தனது பணியை செய்து வந்த குமரன் தற்போது இந்தியாவுக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.