மும்பை: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை கிரிக்கெட் ஜாம்பவானும் நண்பருமான சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வினோத் காம்பிளியும் சச்சின் டெண்டுல்கர் பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களாக சிறந்து விளங்கி இருக்கிறார்கள். இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்கள். சச்சின் டெண்டுல்கர் போல் வினோத் காம்பிளியும் இந்திய கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் உச்சிக்கு சென்றாலும் பின் கிரிக்கெட் மீதான ஆர்வம் விலகி அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கி சென்றது.

இதனால் பல்வேறு தீய பழக்கங்களுக்கு சொந்தமான வினோத் காம்பிளி, தனது வாழ்க்கையிலும் உடல் நலத்திலும் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். தற்போது வினோத் காம்ப்ளியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கூட வினோத் காம்பிளி, உடல் நிலையை பார்த்து கவலை பட்ட கவாஸ்கர், காம்பிளி தீய பழக்கங்களை விட்டால் அவருக்கு உதவ தயார் என்று கூறியிருந்தார்.
இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் அவருக்கு நிறைய உதவிகளை செய்திருந்தார். மீண்டும் அவருடைய உடல்நலம் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அப்போது சச்சின் டெண்டுல்கர் வினோத் காம்பிளியை நேரில் வந்து சந்தித்ததாகவும் அவருடைய உடல் நலம் குறித்து எப்போதுமே அவர் கேட்டு வருவதாகவும் வினோத் காம்பிளியின் சகோதரர் தெரிவித்திருக்கின்றார்.
இது குறித்து பேசிய அவர், வினோத் காம்பிளியும், சச்சினும் உற்ற நண்பராக இருந்தார்கள் மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ரஞ்சிக் கோப்பையில் இருவரும் இணைந்து விளையாடி, ஒரே அறையில் உணவு அருந்தியதை எல்லாம் நான் பார்த்திருக்கின்றேன். வினோத் காம்பிளி நான் மற்றும் சச்சின் மூன்று பேரும் இணைந்து பல பொழுதை கழித்திருக்கின்றோம். தற்போது வினோத் காம்பிளி வீட்டிலிருந்தே தான் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அவருடைய உடல் நலம் தற்போது நன்றாக தான் இருக்கின்றது. பேசுவதற்கு சிரமப்படுகின்றார். இதிலிருந்து மீண்டு வர அவருக்கு கொஞ்சம் நேரம் ஆகலாம். வினோத் காம்பிளி ஒரு சாம்பியன் வீரர். நிச்சயமாக அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்று அவருடைய சகோதரர் விரேந்தர் காம்பிளி தெரிவித்துள்ளார்.