சச்சின் செய்த உதவி.. உடலில் என்ன பிரச்சனை? மனம் திறந்த வினோத் காம்ப்ளி
மும்பை: சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால பயிற்சியாளர் ரமாகந்த் அச்ரேக்கருக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் வினோத் காம்ப்ளி - சச்சின் சந்திப்பு நடந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. வினோத் காம்ப்ளி குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுவுக்கு அடிமையாக இருந்து அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால், அவரது உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அவருக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் அதை ஏற்றுக்கொண்டு போதையில் இருந்து மறுவாழ்வு பெற தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர்.

அது பற்றிய சமீபத்தில் பேட்டி அளித்து இருக்கும் வினோத் காம்ப்ளி தனக்கு உள்ள உடல்நல பாதிப்பு பற்றியும், சச்சின் டெண்டுல்கர் உடனான உறவு பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் வினோத் காம்ப்ளி பேசுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு கூட தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வீட்டில் திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததாகவும் கூறியிருந்தார்.
பலமுறை இது போன்ற சம்பவங்கள் தனக்கு ஏற்பட்டு விட்டதாகவும், ஒரு முறை கார் ஓட்டிக்கொண்டு இருந்தபோது தான் மயக்கம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். அவருக்கு இருக்கும் உடல் நல பிரச்சனைகள் அனைத்துமே மதுவுக்கு அடிமையானதால்தான் ஏற்பட்டது என்ற பிம்பம் இருக்கும் நிலையில், தான் பல மாதங்களுக்கு முன்பே புகை மற்றும் மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாக கூறி இருக்கிறார்.
மேலும், கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அளிக்கும் உதவியை தான் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தற்போது பண நெருக்கடியில் இருப்பதாகவும் கூறினார். 2009 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வினோத் காம்ப்ளி கூறி இருந்தார்.
அப்போது தான் வெறுப்பு அடைந்து அந்த வார்த்தைகளை பேசியதாகவும், ஆனால் சச்சின் தனக்கு பலமுறை மருத்துவ உதவிகளை செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர் செய்த உதவிகளுக்கு தான் என்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்றும் கூறினார் வினோத் காம்ப்ளி.


Click it and Unblock the Notifications