மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் நட்சத்திர வீரராக விளங்கிய வினோத் காம்ப்ளி தற்போது பரிதாபமான நிலையில் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் பள்ளி பருவத்தின் நண்பனான வினோத் காம்ப்ளி ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் உடன் பள்ளி பருவத்தில் கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வினோத் காம்ப்ளி உலகப் புகழ்பெற்றார். சச்சின் இந்திய அணிக்கு விரைவாக அறிமுகமானாலும் வினோத் காம்ப்ளி, 3 ஆண்டுகள் கழித்து தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்தார்.

முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதம், இரண்டு சதம் என வினோத் காம்ப்ளி பட்டையை கிளப்பினார். ஷான் வார்னே பந்துவீச்சை யாராலும் தொட முடியாது நிலையில் வினோத் காம்ப்ளி 22 ரன்களை ஒரே ஓவரில் குவித்தார். இப்படி புகழில் உச்சிக்கு சென்ற வினோத் காம்ப்ளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகின.
ஒழுக்கமற்ற நிலையில் இருக்கிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் போன்ற பல குற்றச்சாட்டுகள் வினோத் காம்ப்ளி மீது இருந்ததால், அவர் 1995ஆம் ஆண்டு தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அவ்வப்போது இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் வினோத் காம்ப்ளி கடைசியாக அக்டோபர் மாதம் 2000ம் ஆண்டு தான் விளையாடினார்.
அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற வினோத் காம்ப்ளி அண்மையில் தமக்கு யாரும் உதவி செய்யவில்லை. தாம் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும் எனக்கு வேலை வேண்டும் என்றும் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். இதனை அடுத்து பலரும் வினோத் காம்ப்ளிக்கு சச்சின் டெண்டுல்கர் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் வினோத் காம்ப்ளி தொடர்பான ஒரு வீடியோ வைரல் ஆனது. இதில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் தள்ளாடிய நிலையில் அவரை ரசிகர்கள் இரு கைகள் தாங்கி அழைத்துச் சென்றனர். அப்போது வினோத் காம்ப்ளியின் கால்கள் மற்றும் கைகள் சரியாக இயங்கவில்லை.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக ஜொலித்த வினோத் காம்ப்ளி தற்போது பரிதாபமான நிலையில் இருப்பதை பார்க்க முடியவில்லை என்று பல ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் உதவ வேண்டும் என்றும் பிசிசிஐ அவருடைய வாழ்க்கையை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.