மும்பை: சச்சின் டெண்டுல்கரின் நண்பரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியை உல்லாச வாழ்க்கையை கைவிடு என தான் எச்சரித்ததாகவும், ஆனால் அவர் "நான்தான் ராஜா" என நினைத்துக் கொண்டிருந்ததாகவும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தற்போது ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
வினோத் காம்ப்ளி, இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த சச்சின் டெண்டுல்கராக வருவார் என 90களின் இறுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் நம்பினர். அவர் அப்போது டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறுகிய காலத்தில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்திருந்தார். மேலும், அவரது பேட்டிங் சராசரி 54 என்பதாக இருந்தது.

ஆனால், அவரது நடத்தை காரணமாக அணியில் தனது இடத்தை இழந்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சோகத்தில் அவர் பல தவறான பழக்கங்களுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் மும்பையில் சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளியின் பால்ய கால பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேகரின் நினைவு விழாவின்போது, வினோத் காம்ப்ளி சச்சினின் கையைப் பிடித்துக்கொண்டு விட மறுத்தார். அவர் அப்போது நிதானத்திலேயே இல்லை.
இதை அடுத்து வினோத் காம்ப்ளியின் உடல்நிலை குறித்து ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு அதிலிருந்து ஓரளவு மீண்டு இருக்கிறார்.
இந்த நிலையில்தான், யோக்ராஜ் சிங் தான் வினோத் காம்ப்ளியுடன் ஒரு முறை பேசியபோது என்ன நடந்தது என விவரித்தார். யோக்ராஜ் சிங் கூறியதாவது: "நான் வினோத் காம்ப்ளியை ஒரு முறை எச்சரித்தேன். 'பார்ட்டிகளுக்குச் செல்வது, சிகரெட் பிடிப்பது, பெண்களிடம் செல்வது ஆகியவற்றை உடனே நிறுத்து. இல்லையெனில், உன் வாழ்க்கை முடிந்துவிடும், நீ அழுது கொண்டு இருப்பாய்' என்றேன்."
"என்னால் எவ்வளவு சத்தமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசினேன். தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் இந்த விஷயங்களைச் சொன்னேன். அதற்கு அவர் 'உங்கள் நேரம் முடிந்துவிட்டது' என்றார். அவருக்கு 'நான் தான் ராஜா' என்ற எண்ணம் இருந்தது. இந்த விளையாட்டை விட நீங்கள் பெரியவர் இல்லை." என்று யோக்ராஜ் சிங் கூறினார்.
எப்போது இந்த பேச்சுவார்த்தை நடந்தது என யோக்ராஜ் சிங் குறிப்பிடவில்லை. வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருந்தபோது இந்த பேச்சு நிகழ்ந்திருக்கலாம். திறமை இருந்தும், தவறான பழக்கவழக்கங்களால் தனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த வினோத் காம்ப்ளியின் கதை, பல இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது. அதே சமயம், வினோத் காம்ப்ளி இந்த நிலைக்கு ஆளானதற்கு காரணமே இந்திய கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் தான் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.