லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. லண்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 280 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்று இலக்குடன் களமிறங்கியது.
5வது நாள் ஆட்டத்தை விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். நேற்று இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில், இன்று இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இன்று ஆக்ரோஷமாக பந்துவீசினர். குறிப்பாக ஸ்காட் போலாந்த் அபாரமாக பந்துவீசி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து ஆடி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 49 ரன்களில் ஸ்மித்தின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார்.
இதே போன்று அடுத்த 2வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, விக்கெட் கீப்பர் அலக்ஸ் கேரி கேட்ச் ஆனார். இதன் மூலம் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது. இதனையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 267 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் கைவசம் 5 விக்கெட் மட்டுமே உள்ளது.
தற்போது வானமும் கொஞ்சம் மேகமூட்டத்துடன் இருப்பதால், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருக்கிறது. மதிய நேரத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை வருவதற்குள் போட்டி முடிவடைந்தவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.