மும்பை: விராட் கோலிக்கு உண்மையாகவே கழுத்து வலி உள்ளதா அல்லது அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருப்பதற்காக கழுத்து வலி இருக்கிறது என்ற தகவல் பரப்பப்படுகிறதா? என்ற சர்ச்சை எழுந்து இருக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் இந்திய அணி ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாக இந்திய அணி முக்கிய தொடர்களில் தோல்விகளை சந்தித்து வந்தது. இதை அடுத்து பிசிசிஐ வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இனி உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் அளிக்கப்படும் என கூறப்பட்டது.

அதனால், விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற டெஸ்ட் அணி வீரர்கள் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியில் ஆட தயாராகி வந்தனர். ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணியில் இடம் பெற்று விராட் கோலி ஆடுவார் என கூறப்பட்டது. ஆனால், திடீரென விராட் கோலிக்கு கழுத்து வலி இருப்பதால் அவர் பங்கேற்க மாட்டார் என நேற்று முதல் செய்திகள் வெளியாகத் தொடங்கின.
டெல்லி அணி அறிவிக்கப்பட்ட போது அதில் விராட் கோலி பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால், அவர் விளையாட மாட்டார் எனவும் கூறப்பட்டு இருந்தது. அதே போல கே எல் ராகுலுக்கு முழங்காலில் பிரச்சனை இருப்பதால் அவரும் கர்நாடகா அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி இரண்டு முக்கிய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் தங்களுக்கு காயம் இருப்பதாக சொல்லி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுவரை ஒரு சர்வதேச போட்டியில் கூட காயத்தால் ஆட முடியாது என விராட் கோலி சொன்னதே இல்லை. அப்படி ஒரு 100 சதவீத உடற் தகுதி உள்ள வீரர் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்திய உடன் காயம் என சொல்வது நம்பும்படி இல்லை என சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு இதே போல காயத்தால் ரஞ்சி டிராபி போட்டியில் ஆட மறுத்தார். அவருக்கு உண்மையாகவே முதுகு வலி இருந்தது. ஆனால், அவர் வேண்டுமென்றே ஆட மறுத்ததாக கூறி பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்து இருந்தது. அதேபோல தற்போது விராட் கோலி மற்றும் கே எல் ராகுலின் ஒப்பந்தங்களையும் பிசிசிஐ ரத்து செய்ய வேண்டும் என சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.