மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 2027 உலக கோப்பை தொடரின் விளையாடுவதற்கு தேவையான அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஐபிஎல் தொடருக்கு பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்கள்.
இதற்கு இடையில் நடைபெற்ற இந்தியா ஏ ஆஸ்திரேலியா ஏ தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்வு குழுவின் அறிவுறுத்தலை இருவரும் நிராகரித்தனர். இதனால் கடுப்பான தேர்வு குழு இந்திய ஒரு நாள் அணி கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, கில்லை நியமித்து இருக்கிறது.

இதன் மூலம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் மறைமுக எச்சரிக்கையை தேர்வுக்குழு விடுத்திருந்தது. இதனால் பல முன்னாள் வீரர்களும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19ஆம் தேதி 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக தான் மூன்று ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் ஹசாரே கோப்பை நடத்தப்படுகிறது. இந்த தொடரில் விளையாடும் படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு தேர்வுக்குழு மீண்டும் வலியுறுத்தியது.
இல்லையென்றால் உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மாவும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட முடிவெடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் 3 அல்லது 4 விஜய் ஹசாரே போட்டிகளில் விளையாடினாலே போதுமானது என்று தேர்வுக்குழு அவர்களுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது.
இதனை விராட் கோலி ,ரோஹித் சர்மா ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் உலககோப்பை தொடரில் விளையாடுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய இருவரும் தயாராக இருக்கின்றனர்.