கொழும்பு: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி இருவரும் இணைந்து அதிவேகமாக 5 ஆயிரம் பார்ட்னர்ஷிப் அமைத்த கூட்டணி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்சர் படேல் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிலையில், இந்திய அணி 11 ஓவர்களிலேயே 80 ரன்களை எட்டியது. இந்த நிலையில் இலங்கை அணியின் வெல்லாலகே வீசிய பந்தில் இளம் வீரர் சுப்மன் கில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி இணைந்தது. இருவரும் 10 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை குவித்த கூட்டணி என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த சாதனையை இருவரும் இணைந்து 86 ஒருநாள் போட்டிகளில் படைத்துள்ளனர். இதுவரை இவர்கள் 18 முறை 100 ரன்களுக்கு மேலாகவும், 18 முறை 50 ரன்களுக்கு மேலாகவும் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர்களான கார்டன் க்ரீனிட்ஜ் - ஹெய்ன்ஸ் இருவரும் 97 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர். இவர்களின் சாதனையை ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி முறியடித்துள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி மற்றும் ரோகித் சர்மா - ஷிகர் தவான் கூட்டணி இணைந்து 5 ஆயிரம் ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.