மும்பை: ஐபிஎல் தொடரில் தற்போது ரசிகர்கள் முழு வீச்சில் கவனம் செலுத்தி வந்தாலும், பிசிசிஐ இந்திய அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து தனியாக யோசித்து வருகிறது. ஐபிஎல் தொடர் முடிவு அடைந்தவுடன் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு பயணம் காத்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனால், இந்த இங்கிலாந்து தொடரில் எப்படியாவது வெற்றி பெற்று இழந்த பெருமையை டெஸ்ட் கிரிக்கெட்டில் மீட்க வேண்டும் என பிசிசிஐ யோசித்து வருகிறது. இந்த சூழலில் ரோகித் சர்மா தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பாரா இல்லை அந்த வாய்ப்பு பும்ராவுக்கு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது முற்றிலும் வித்தியாசமானது என்பதால் கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் பும்ரா தற்போது அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதால், அவரால் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு பயிற்சி செய்ய ஏதுவாக இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணி உடன் இரண்டு நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் இந்திய ஏ அணியில் செல்ல இருந்தனர். ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு இங்கிலாந்து மண்ணில் பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக சீனியர் வீரர்கள் இருவரையும் இந்திய ஏ அணியில் சேர்க்க பிசிசிஐ யோசித்து வருகிறது.
குறிப்பாக இதுபோன்ற இளம்வீரர்கள் கொண்ட ஏ அணியில் சீனியர் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள். ஆனால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி சீனியர் வீர்களையும் இந்திய அணியில் சேர்த்து அனுப்ப பிசிசிஐ யோசித்து வருகிறது. ஐபிஎல் தொடர் 25ஆம் தேதி மே மாதம் முடிவடையுள்ள நிலையில் மே 30ஆம் தேதி மற்றும் ஜூன் 6-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.