லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். ஏற்கனவே டி20 உலக கோப்பை வென்ற பிறகு இருவரும் டி20 போட்டிகளில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் தற்போது வெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் தான் விளையாட முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த சூழலில் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த இரண்டு வீரர்களுக்கும் கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளை உள்ள நிலையில் இந்திய அணி வெறும் 24 ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பிசிசிஐயும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் டி20 தொடர் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி ஜூலை 11-ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஒரு நாள் தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா பங்கேற்கும் கடைசி வெளிநாட்டு தொடர் எதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் நடப்பு இங்கிலாந்து தொடரில் இடம் பெறவில்லை என்று பல ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது இந்திய அணி அடுத்த ஆண்டு மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வரப்போகிறது என்ற செய்தி கேட்டவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை கடைசியாக ஒரு முறை இங்கிலாந்து மண்ணில் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதேபோன்று நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணி ஆகிய மூன்று அணிகளுடன் இங்கிலாந்து அடுத்த ஆண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.