மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு எதிராக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விராட் கோலியின் உற்ற நண்பராக விளங்கிய ரவி சாஸ்திரி, கோலி கேப்டனாக இருந்தபோது அணியில் பயிற்சியாளராக செயல்பட்டார்.
இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தார்கள். விராட் கோலி எப்போதெல்லாம் விமர்சனத்தில் சிக்குகிறாரோ, அப்போதெல்லாம் ரவி சாஸ்திரியின் ஆதரவு குரல் கண்டிப்பாக வரும். இந்த நிலையில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர்.

தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாடுகின்றனர். 2027 உலக கோப்பை தொடரில் இருவரும் விளையாட முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் அது நடைபெற சாத்தியம் இல்லை என அதிர்ச்சி கருத்து தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி. இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, தற்போது இந்திய அணியின் ஒரு பகுதியாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய எதிர்காலம் என்பது உடல் தகுதி அவர்களுக்குள் இருக்கும் ரன் பசி மற்றும் பார்ம் ஆகியவை தான் முடிவு செய்யும். தற்போது இந்தத் தொடர் தான் அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்த தொடர் முடிவடைந்த பிறகு நாம் எந்த அளவுக்கு இருக்கின்றோம். நாம் எப்படி உணர்கிறோம் என்பதை இருவரும் தெரிந்து கொள்வார்கள்.
பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதால் தங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்பதை விராட் கோலியும், ரோகித் சர்மாவும் உணர்வார்கள். ஆல் ரவுண்டர்களை எடுத்துக் கொண்டால் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் பட்டேல் ஆகியோர் இருக்கிறார்கள்.
ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் திலக் வர்மா சிறப்பாக விளையாடினார்.
நெருக்கடியான காலகட்டத்தில் எப்படி விளையாடுவது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இதைத்தவிர ஜெய்ஸ்வால், கில், அபிசேக் போன்ற வீரர்களும் உள்ளனர். ஆனால் முக்கியமான தொடர்களில் முக்கியமான பெரிய போட்டிகளில் அனுபவத்திற்கு ஈடான ஒரு விஷயம், வேறு எதுவும் கிடையாது. அதை நாம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலே பார்த்திருக்கின்றோம். பெரிய போட்டிகளில் பெரிய வீரர்கள் தங்களுடைய திறனை வெளிக்காட்டுவார்கள். ஆனால் இந்த வயதில் விராட் கோலி, ரோகித் சர்மா தங்களுடைய கிரிக்கெட்டை எஞ்ஜாய் செய்ய வேண்டும். 2027 உலக கோப்பை வரை இருவரும் விளையாடுவது கொஞ்சம் சந்தேகமே என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.