மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியும் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு விஷயத்தில் அவர் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் மொத்தமாக 241 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய சராசரி 48 ஆகும். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஸ்ரேயாஸ் இறுதிப்போட்டியில் 48 ரன்கள் சேர்த்தார். எனினும் இந்திய அணி 69 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலையில், ஸ்ரேயாஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்ததாக வெங்சர்கார் தெரிவித்துள்ளார் .இது குறித்து பேசிய அவர், "ஸ்ரேயாஸ் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் ஆட்டம் இழந்த முறை எனக்கு சந்தோஷத்தை தரவில்லை."
"ஸ்ரேயாஸ் போட்டி முடியும் வரை நின்று விளையாடி ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முழு திறமையை தற்போது தான் உணர்ந்திருக்கிறார் என நினைக்கின்றேன். இதேபோன்று ராகுல் இந்த தொடரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் .ஆனால் அக்சர் பட்டேல் ஏன் நம்பர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார்."
" அவருடைய பேட்டிங்கில் எனக்கு பெரிய திருப்தி இல்லை. ராகுல்தான் பேட்டிங் வரிசையில் 5வது இடத்தில் களமிறங்கி இருக்க வேண்டும். இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம் நடந்திருக்கும் என நினைக்கிறேன். ரோகித் சர்மா எதிர்காலம் பொருத்தவரை நான் ஒன்றும் ஜோதிடர் கிடையாது."
"ஆனால் 2027 உலக கோப்பைக்கு முன்பு நிறைய போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டும். அதில் ரோகித் சர்மா எப்படி விளையாடுகிறார், உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். எனவே இந்த கட்டத்தில் எதுவும் சொல்வது சரி கிடையாது. ரோகித் சர்மா தான் தன்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் பெரிய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவர்கள் அணியில் இருப்பது மிகவும் முக்கியம் என நினைக்கின்றேன். இருவரும் பிளேயிங் லெவனில் இருக்கும்போது அது எதிரணியை நிலை குலைய செய்யும்" என்று வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.