மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் 5லும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் ஒரு காலை இந்திய அணி வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதற்கு இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோரின் அபார பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாகும்.

இந்திய அணியின் விராட் கோலி 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களையும், ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடி 311 ரன்களையும் விளாசியுள்ளார். அதேபோல் பவுலிங்கில் இந்திய அணியின் சிராஜ், குல்தீப் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர். பும்ரா 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும், சிராஜ் 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இது ஐசிசி பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். விராட் கோலியுடன் டேவிட் வார்னரும் 5வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 9வது இடத்தில் இருந்து முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கும் சுப்மன் கில்லுக்கும் இடையில் வெறும் 6 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் 3 சதங்களை விளாசிய டி காக் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3வது இடத்திலும், கிளாஸன் 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
அதேபோல் பவுலர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் சிராஜ் 2வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய அணி நட்சத்திர வீரரான குல்தீப் யாதவ் 9வது இடத்தில் நீடிக்கிறார். பவுலர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா அணியின் கேசவ் மஹாராஜ் 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார்.