மும்பை : வரும் 12 மாதங்களில் தேர்வு குழு கடினமான முடிவை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கரை வலியுறுத்தியுள்ளார்.
அஜித் அகார்கர் தனது முதல் பணியாக வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்தார். இதில் வழக்கம் போல் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஜூனியர் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அகார்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இனி அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரோகித் சர்மா 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு கேப்டனாக இருப்பாரா என்று யோசிக்க வேண்டும். ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோர் டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்பது முன்பு இருந்த தேர்வுக்குழு எடுத்த முடிவாகும்.
தற்போது புதிதாக வந்திருக்கும் நீங்கள் அதே முடிவை தான் எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா? அப்படி என்றால் எப்போது தான் நீங்கள் சீனியர் வீரர்களை களை எடுக்க போகிறீர்கள்? களை எடுப்பு என்ற வார்த்தை தவறாக கூட இருக்கலாம். நான் எதை சொல்கிறேன் என்றால் எப்போது நீங்கள் இளம் வீரர்களை நோக்கி செல்லப் போகிறீர்கள்? அதனை நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்? எந்தத் தொடரில் இருந்து நீங்கள் அதை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
சீனியர் வீரர்கள் தேவையில்லை என்று எப்படி நீங்கள் அவர்களுக்கு உங்களுடைய கருத்தை சொல்ல போகிறீர்கள்? இதை அனைத்தும் நான் அஜித் அகார்கரிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அஜித் அகார்கர் மும்பை அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தபோது இது தான் நடந்தது சீனியர்களை களை எடுத்ததால் அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேர்ந்தது.
அஜித் அகார்கர் மீது பலரும் நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள். இதனால் தான் சொல்கிறேன் அஜித் அகார்கர் தான் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்னைக் கேட்டால் அடுத்த 12 மாதங்களில் நீங்கள் அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டும். இவர் சீனியர் இவரை எப்படி தூக்குவது என்றெல்லாம் நீங்கள் யோசிக்க கூடாது. இளம் வீரர்கள் மீது எந்த அளவுக்கு நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு முதல் தர கிரிக்கெட் மீது மரியாதை வரும் என்று அவர் கூறினார்.