மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் பயணத்தின் போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரவுள்ளனர். இருவரும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
எனினும், ஆஸ்திரேலிய பயணம் ரோஹித் மற்றும் கோலியின் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித்துக்கு 37 வயதாகவும், கோலிக்கு 36 வயதாகவும் உள்ளது. இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனான டாரில் கல்லினன், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டைத் தொடர்ந்து விளையாடுவதற்கு போதுமான அனுபவம் மற்றும் திறமை இருந்தாலும், உடல் மற்றும் மனதளவில் தயாராக இருக்க உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், அவர்கள் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும். நான் பயிற்சியாளராகவோ அல்லது தேர்வாளராகவோ இருந்தால், எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், சில போட்டிகளை மட்டும் விளையாடி, பயிற்சி செய்யாமல், பின்னர் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைப்பது சரிப்பட்டு வராது என்று சொல்லிவிடுவேன்" என்று தெரிவித்தார்.
விஜய் ஹசாரே கோப்பை டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது, மேலும் ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்பு இந்த தொடரில் விளையாடுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் இந்த ஆண்டு கான்பூரில் ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான இந்தியா A-வின் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய டாரல் கல்லின், "இது ஒரு சிக்கலான சூழ்நிலை, அவர்கள் எப்போதும் மைதானத்தில் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை."
"ஆனால் உலகக் கோப்பைக்கு முன்பு அவர்கள் கணிசமான அளவு கிரிக்கெட் விளையாடி, உடல் மற்றும் மனதளவில் சரியான நிலையில் இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டின் கடினமான தன்மைக்கு தயாராக இருக்க வேண்டும். உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், ஆமாம் என்று கூறுவேன், ஆனால் அதற்கு குறைவாக இருந்தால், இந்தியா முன்னோக்கி செல்ல வேண்டும்."
"அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் தரமான கிரிக்கெட்டை அதிகம் விளையாட வேண்டும்!" எரோஹித் விளையாடினாலும், கில்லுக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும்." என்று கல்லின் தெரிவித்துள்ளார்.
ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை.