மும்பை : பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட தவறிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் ஆகியோரை வீரர்கள் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ அண்மையில் நீக்கியது.
இந்த நிலையில் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சில கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் 1983 உலக கோப்பையை வென்ற இந்திய வீரர் கீர்த்தி ஆசாத் பிசிசிஐ இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பிசிசிஐ எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஒரு நல்ல முடிவு. இந்திய வீரர்கள் அனைவருமே ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஏனென்றால் தற்போது உள்ள தலைமுறை ஐபிஎல் போட்டியில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட். அது ரசிகர்களுக்கும் பொழுதுபோக்கை கொடுக்கும்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டியை விளையாடினால் தான் நீங்கள் தொடர்ந்து பார்மில் இருப்பீர்கள். நீங்கள் எப்போதெல்லாம் ப்ரீயாக இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் நீங்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டும். நீங்கள் விராட் கோலியாக இருந்தாலும் சரி ரோகித் சர்மாவாக இருந்தாலும் சரி ரஞ்சி கிரிக்கெட்டில் சென்று உங்கள் அணிக்காக விளையாடுங்கள்.
இந்த அணிகள் தான் உங்களை ஒரு வீரராக உயர்த்தியது என்பதை மறந்து விடாதீர்கள். இதில் விளையாடிய பிறகுதான் உங்கள் நாட்டிற்கு விளையாட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் இசான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது சரி கிடையாது. அனைத்து வீரர்கள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.
மற்ற வீரர்கள் மட்டும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்களா என்ன? நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும் போது கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மதன்லால், அமர்நாத் போன்ற வீரர்கள் எல்லாம் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினார்கள். இதன் மூலம் இளம் வீரர்கள் அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு இருந்தது. மேலும் அவர்களுடன் விளையாடும்போது எங்களுக்கும் பெருமையாக இருக்கும்.
தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவுவது இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட்டை பாருங்கள்! எத்தனை வீரர்கள் கவுண்டி தொடரில் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து வீரர்களால் முடியும் போது ஏன் நமது வீரர்களால் ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது. தூரல் ஜூரல், சர்பராஸ்கான் போன்ற வீரர்களை பாருங்கள். அவர்கள் டி20 யிலும் விளையாடுகிறார்கள்,ரஞ்சி போட்டியிலும் விளையாடுகிறார்கள். பேட்ஸ்மேன் மட்டுமல்ல பவுலர்களும் ரஞ்சி போட்டியில் விளையாடினால் மட்டுமே உங்களுடைய பழைய பார்மை மீட்க முடியும் என்று கீர்த்தி ஆசாத் கூறியிருக்கிறார்.