மும்பை:இனி இந்திய அணியை தேர்வு செய்யும்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் கருத்து கேட்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார். இந்திய அணி தேர்வு செய்யப்படும் போது கம்பீர் மற்றும் அகர்கர் ஆகியோர் பல தவறுகளை செய்வதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.
கேப்டனாக இருக்கும் கில்லுக்கு அணியை தேர்வு செய்வதில் எந்த ஒரு பவரும் வழங்கப்படவில்லை. இதனால் பல திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எப்போது அணியை விட்டு செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமையை அவர்களுக்கே தந்து விட வேண்டும்.

ஏனென்றால் பல ஆண்டுகளாக அவர்கள் இந்திய அணிக்கு தங்களது சேவையை தந்திருக்கிறார்கள். இவ்வளவு செய்தும் 2027 உலக கோப்பைக்கு விளையாட வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும் என்பது போல் சிலர் பேசி வருவது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்திருக்கிறது.
இதுபோன்ற வீரர்களை மற்ற சாதாரண வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பதே முதலில் தவறு. இதனால் தான் அவர்களுடைய ரசிகர்களுக்கு இதை பிடிக்கவில்லை. இதனால் தான் பலரும் சமூக வலைத்தளத்தில் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
இன்னும் கேட்டால் இந்தியாவில் தேர்வு செய்யப்படும்போது தேர்வுக்குழு உடன் கோலியும், ரோகித் சர்மாவும் அமர்ந்து விவாதிக்க வேண்டும். இந்த வீரரை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி கேட்க வேண்டும். இந்த இரண்டு வீரர்களையும் இந்திய அணி நிர்வாகம் நடத்தும் முறை பலருக்கும் பிடிக்கவில்லை.
ஆனால் அவர்கள் தான் இன்னும் ரன்கள் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார்கள். இப்படி இருக்கும் போது அவர்களை நீங்கள் எப்படி எடை போடுகிறீர்கள். எனக்கு ரோகித் சர்மாவை ஏன் நீங்கள் கேப்டன் பதவியில் இருந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் நீக்கினீர்கள் என்றே புரியவில்லை. இந்த இரண்டு வீரர்களும் அணிக்கு திரும்பியவுடன் அணி எப்படி மாறி இருக்கிறது என்பதை பார்த்தாலே புரியும்.
பில்டிங்கில் இருக்கும் அடிப்படை விஷயங்கள் கூட தற்போது பின்பற்றப்படுகிறது. விராட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தங்களுடைய அறிவுரைகளை மற்ற வீரர்களுக்கு களத்தில் சொல்லித் தருகிறார்கள். முதல் ஒருநாள் போட்டியில் ரிவ்யூ எடுக்காமல் ரோகித் சர்மா சென்றார். அவர் ரிவ்யூ கேட்டிருந்தால் யாரும் அவரை திட்ட போவது கிடையாது. ஆனால் எவ்வளவு தன்னலம் இன்றி ரிவ்யூவை வீணடிக்க கூடாது என்று சென்றிருக்கிறார் பாருங்கள் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.